புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மணம் கூட்டும் மங்களன்

விநாயகருக்கு நடைபெறும் திருக்கல்யாணத்தைக் காண, தமிழகம் மட்டுமன்றி, பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்பார்கள்.

News image
Updated On :30 ஆகஸ்ட் 2024, 12:16 pm

இரா. இரகுநாதன்

"வி' என்றால் " உயர்ந்தவர்'. "நாயகன்' என்றால் தலைவன். விநாயகனுக்கு மேல் உயர்ந்தவரும் மிக்கவரும் இல்லை என்பது பொருளாகும். விக்னமானது "வினை' எனப்பொருள்படும். "துயரங்களில் இருந்து காப்பவர்' என்னும் பொருளில் "விக்னேஸ்வரர்' எனப்படுகிறார்.

நரசிம்மவர்ம பல்லவனின் காலத்தில் படைத்தலைவரான பரஞ்சோதி (பின்னாளில் சிறுத்தொண்டர்), வாதாபியை வென்று அங்கிருந்த கணபதியைக் கொண்டு வந்து தனது ஊரில் திருச்செங்காட்டங்குடியில் நிறுவினார். அதுவே "வாதாபி கணபதி' என்று பெயர்.

பிள்ளையார்பட்டி விநாயகர், திண்டிவனம் ஆலகிராமத்தில் உள்ள தமிழ் வட்டெழுத்துகளுடன் கூடிய விநாயகர் சிலை, செங்கல்பட்டை அடுத்த இரும்பேடு கிராமத்தில் உள்ள விநாயகர் சிற்பம் ஆகியன 4 முதல் 6}ஆம் நூற்றாண்டு வரையான காலத்தில் விநாயகர் வழிபாடு இருந்ததைக் காட்டுகிறது.

ஆற்றங்கரை, நீர்நிலைகள், கோயில்கள் மரத்தடிகள் எனப் பல இடங்களிலும் விநாயகனாக விளங்குபவர் ஒருவரே.

இவரை ஆனைமுகன் கஜமுகன், ஐங்கரன் கணேசன், கணபதி, லம்போதரன், பிள்ளையார் எனவும் குறிக்கப்படுகிறார். தமிழகத்தில் இவரது பொதுப்பெயர் பிள்ளையார்.

விநாயக மூர்த்தங்கள் 32 வகை எனப்படுகின்றன. இந்த வகைகளில் எல்லாம் அடங்காமல் அமர்ந்திருக்கும் திசையாலும் அருளும் ஞானத்தாலும் ஒரு விநாயகர் "தட்சணாமூர்த்தி விநாயகர்' என வணங்கப்படுகிறார். இந்த விநாயகர் எழுந்தருளியிருக்கும் தலம் "மேலத்தூர்' என்று பெயர் பெற்று, தற்போது "மெலட்டூர்' எனப்படுகிறது.

ஸ்ரீகர்க மகரிஷி அருளிய புராணத்தில் இடம் பெற்றிருக்கும் 108 கணபதி தலங்களில் இது 81-ஆவது தலமாகப் போற்றப்படுகிறது. விநாயகருக்கான தனிக் கோயிலாக இருந்தாலும், கருவறைக்கு இடப்புறம் பிரகாரத்தில் யோக நிலையில் காட்சி அருளும் ஸ்ரீ கும்ப சண்டிகேசுவரர் சந்நிதி அமைந்திருக்கிறது.

சித்தி, புத்தி சமேதராக "தட்சிணாமூர்த்தி விநாயகர்' என்ற திருநாமத்தோடு எழுந்தருளியிருக்கிறார். சுயம்புவாகத் தோன்றிய விநாயகர் மூலவராக, தென்திசையை நோக்கி காட்சி அருள்கிறார். சித்தி, புத்தி தேவியர் மந்திர ஸ்வரூபத்தில் விநாயகரின் பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.

இங்கு "நர்த்தனகணபதி' அருள்புரிகிறார். கணபதியும் சூலத்தில் எழுந்தருளியுள்ளார். உற்சவராக தட்சிணாமூர்த்தி விநாயகர் சித்தி புத்தியுடன் அருள்பாலிக்கிறார் .

கருவறையை சுற்றியும், கொடிமரத்தைச் சுற்றியும், கோயிலுக்கு வெளியிலும் என மூன்று பிரகாரங்களைக் கொண்டுள்ளது. ஸ்ரீ சண்டீகேஸ்வரர், ஸ்ரீ பைரவர்களுக்கென தனிமண்டபங்கள், அலங்கார மண்டபம், வசந்த மண்டபம் , யாகசாலை, மடப்பள்ளி ஆகியன உள்ளன.

ஒருமுறை விநாயகர் உருவைக் கண்டு சந்திரன் கேலியாக சிரித்தார். சந்திரனின் கர்வத்தை அடக்க விநாயகரோ, "சந்திரன் தேய்ந்து மறையட்டும்' என்று சாபமிட்டார். சந்திரன் தேய்வால் உலகம் இருண்டது. அனைவரும் விநாயகரைச் சரணடைந்தனர். சந்திரனும் தன்னை மன்னிக்க வேண்டி தவம் புரிந்தான். விநாயகரும் பிறைச்சந்திரனை தன் தலையில் சூடிக்கொண்டு, "பாலச்சந்திரன்' என்ற பெயருடன் "சந்திரன் 15 நாள்கள் தேய்ந்தும் பிறகு 15 நாள்கள் வளரும்' என்ற வரத்தை அருளினார். அப்படி சந்திரன் வரம் பெற்ற நாள் தேய்பிறை சதுர்த்தியே "சங்கட ஹர சதுர்த்தி' கொண்டாடப்படுகிறது. ஆவணி வளர்பிறை சதுர்த்தி திதியன்று கொண்டாடப்படும் "விநாயக சதுர்த்தி' முக்கியமான விழாக்களுள் ஒன்றாகும்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஆண்டு பிரம்மோற்சவம் ஆகஸ்ட் 28}இல் தொடங்கியது. பத்து நாள்கள் நடைபெறும். செப்டம்பர் 2}இல் ஓலைச்சப்பரமும், 4}இல் திருக்கல்யாணமும், 6}இல் திருத்தேரும் முக்கிய நிகழ்வுகளாக நடைபெறுகின்றன.

அரிதான விநாயகருக்கு நடைபெறும் திருக்கல்யாணத்தைக் காண, தமிழகம் மட்டுமன்றி, பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்பார்கள். அன்று தரிசித்து பிரார்த்தனை செய்து, மலர்மாலையும், மஞ்சள் கயிறும் அணிந்து கொண்டால்,' திருமணம் கைகூடும் என்பது ஒரு ஐதீகம்.

வாரத்தில் ஞாயிறு, திங்கள், வியாழக்கிழமைகளில் தொடர்ந்து நான்கு வாரங்கள் விநாயகருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு, பிரார்த்தனை செய்தால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து வழிபடுவது சிறப்பானது. பிள்ளைகளின் கல்விச் செல்வமும் சிறக்கும்.

தஞ்சாவூரிலிருந்து 18 கி.மீ. தொலைவில் திருக்கருகாவூர் செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது மெலட்டூர்.

தொடர்புக்கு: 99943 67113

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.