நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கம்பருக்கு வழிகாட்டிய கார்வண்ணன்

வால்மீகி ராமாயண மூலநூலின் கருவைக் கொண்டு நடைமுறை கருத்து மாற்றங்களுடன் 11 ஆயிரம் சந்தங்கள் கொண்ட விருத்தப்பாவில் கம்பர் எழுதினார்.

News image
Updated On :24 மே 2024, 11:33 am

இரா. இரகுநாதன்

ராஜராஜ சோழனின் கொள்ளுப் பேரனும், கங்கை கொண்ட ராஜேந்திர சோழனின் பேரனும், இரண்டாம் ராஜேந்திரச் சோழனின் மகனுமான ராஜமகேந்திரன் பெயரில் அமைந்திருக்கும் ஊர் "ராஜமகேந்திரச் சதுர்வேதிமங்கலம்'. இது நான்கு வேதங்களையும் ஓதக் கூடிய அந்தணர்கள் வாழ்ந்த ஊராகும்.

ஸ்ரீரங்கம் கோயிலின் நான்காம் பிரகாரத்து வடபுறச்சுவரில் சொர்க்கவாயில் இடப்புறம் உள்ள முதலாம் குலோத்துங்கச் சோழன் 11-ஆம் ஆண்டு கல்வெட்டு இவ்வூர் பெருமாள் கோயிலை திருமேற்கோயில் என்றும் மும்முடிச் சோழ விண்ணகரம் என்றும் கூறுகிறது.

மும்முடிச்சோழ விண்ணகரத்துக்கு முதல் குலோத்துங்க சோழனின் இரண்டாம் ஆட்சியாண்டான கி.பி. 1072-ஆம் ஆண்டில் அழிவுகளும் ஏற்பட்டன. இழப்புக்குப் பிறகு அவ்வூர் பெருங்குடி மக்கள் கூடி கோயிலைப் புனரமைத்து 1081-ஆம் ஆண்டு கும்பாபிஷேகத்தை நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டத்துக்கு உள்பட்ட குத்தாலம் அருகேயுள்ள தேரழுந்தூரில் கி.பி. 1180}ஆம் ஆண்டில் பிறந்த கம்பரோ தமிழ், சம்ஸ்கிருதத்தில் புலமை பெற்று விளங்கினார்.

இளமையில் கம்பரை சடையப்ப வள்ளல் என்னும் சிற்றரசர் ஆதரித்தார். பின்பு சோழமன்னன் தன் அரசவையில் தலைமைப் புலவர்களில் ஒருவராக்கிக் கொண்டார்.

வால்மீகி ராமாயண மூலநூலின் கருவைக் கொண்டு நடைமுறை கருத்து மாற்றங்களுடன் 11 ஆயிரம் சந்தங்கள் கொண்ட விருத்தப்பாவில் கம்பர் எழுதினார். கம்பர் கவிதையில் சொல்ல மாணவர்கள் பட்டோலையில் பதிய, இரவு நேரங்களில் காளிதேவியே தீப்பந்தம் பிடித்தாள் என்றும் கம்பர் ஒவ்வொரு பகுதியும் காண்டமும் முடித்த பிறகு மும்முடிச்சோழ விண்ணகரப் பெருமாளிடம் சென்று படித்துக் காட்டி ஒப்புதல் பெற்றார் என்றும் வரலாறு உண்டு.

ஸ்ரீரங்கம் கோயிலில் கம்பராமாயணஅரங்கேற்றத்தில் நரசிம்மர் அரூபமாய் எழுந்தருளி ராமாயண காவியத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார். இரணிய சம்காரத்தைப் பற்றிய பாடல்களை சில அறிஞர்கள் ஏற்கவில்லை. "திசை திறந்து அண்டங்கீறி சிரித்தது செங்கட்சீயம்' என்ற வரிகள் வந்தபோது மண்டபத்தின் மேலிருந்த அரூப நரசிம்ம மூர்த்தியின் திருவுருவம் தோன்றி சிரித்ததோடு தன் தலையையும் ஆட்டினாராம். இன்றும் அந்த நரசிம்மர் "மேட்டழகியசிங்கர்' என வணங்கப்படுகிறார்.

கம்பரின் மகன் கவிஞன் அம்பிகாபதியோ சோழ மன்னனின் மகளான அமராவதியைக் காதலித்தான். அரசவைப் புலவர்களின் பொறாமை, காழ்ப்புணர்ச்சியில் மன்னரும் அம்பிகாபதியைக் கொன்றுவிட்டார். மகன் மறைவுக்குப்

பிறகு தன் மன ஆறுதலுக்காக மூன்று ஆண்டுகளுக்கு மேலாக, ராஜ மகேந்திரச் சதுர்வேதிமங்கலத்தில் கம்பர் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.

புலவர்கள் பலரால் மன்னருடன் ஏற்பட்ட பிணக்கால் கம்பர் இங்கிருந்து , ஆந்திரத்துக்குச் சென்று சிலகாலம் தங்கியிருந்தார். பின்னர், பாண்டிய நாட்டு சிவகங்கை மாவட்டத்துக்கு உள்பட்ட நாட்டரசன் கோட்டை அருகேயுள்ள கருதுப்பட்டி கிராமத்தில் வணிகர்களின் பராமரிப்பில் இருந்த கம்பர் கி.பி. 1250}இல் மறைவுற்றார்.

நத்தம் என்றால் வாழும் இடம் எனப் பொருள். பல இடங்களில் வாழ்ந்தாலும் தன் கவிப்புலமைகளை சீர்செய்து கொள்ள கணிசமான நாள்கள் வாழ்ந்த ராஜமகேந்திரச் சதுர்வேதி மங்கலம் நாளடைவில் கம்பர் வசித்ததால், "கம்பர் நத்திய இடம்' எனப்பட்டது. பின்னர், "கம்பர்நத்தம்' என்றாகி, "கம்பயநத்தம்' எனப்படுகிறது .

இவ்வூரின் வளம் குறித்து நெல் கட்டு கலம் காணும் கதிரானது "உழக்குக்காணும், சொன்ன பொதி காணும் சோழராசா சீர்மையிலே..' என கம்பர் பாடியதாக தனிப்பாடல் குறிக்கிறது. கம்பயநத்தம் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்பட்ட பாபநாசம் அருகேயுள்ள சாலிய மங்கலத்தை அடுத்த அருந்தவபுரம் செல்லும் சாலையில் இயற்கை எழிலிடம் இருக்கிறது. மும்முடிச் சோழ விண்ணகரமானது தற்போது "ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயில்' என அழைக்கப்படுகிறது.

இந்தக் கோயில் கருவறை, விமானம், மகாமண்டபம், பிரகாரம், திருச்சுற்று மதிலுடன் இன்று விளங்குகிறது. கட்டடம் சுமார் 400 ஆண்டுக்குள்ளாக, தஞ்சை நாயக்கர் மராட்டிய மன்னர்கள் காலத்தில் பழுதுபார்க்கப்பட்டுள்ளது.

கருவறையில் ஸ்ரீனிவாசப்பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற கோலத்தில் உற்சவர் முன்னிருக்க அருளுகின்றார். முன்மண்டபத்தில் பாஷ்யகாரரும் வேதாந்த தேசிகரும் எழுந்தருளியுள்ளனர். அருகே அனுமாரும் விஜயவீர ஆஞ்சநேயரும் எழுந்தருளியிருக்க, எதிரே பெரிய திருவடி கருடாழ்வாரும் எழுந்தருளியுள்ளனார்.

இவ்வூரிலிருந்து புலம் பெயர்ந்தோர் குழந்தைகளுக்கு அட்சராப்பியாசம் முதல் எந்த நிகழ்ச்சியையும் இங்கே வந்து வணங்கியே துவங்குகின்றனர்.

இந்தக் கோயில் திருப்பணி நிறைவு பெற்று, ஜூன் 16}இல் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

தொடர்புக்கு: 9715037810, 9688890874.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.