மனமகிழ்ச்சியை அளிக்கும் லட்சுமி நரசிம்மர்

அழகிய இயற்கை அழகுடன் அமைந்துள்ள இந்தக் கோயில் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.
மனமகிழ்ச்சியை அளிக்கும் லட்சுமி நரசிம்மர்
Updated on
1 min read

பாலாற்றின் கரையில் பழைய சீவரம் எனும் ஊரில் சிறுகுன்றின் மீது லட்சுமி நரசிம்மர் கோயிலும், இந்த மலைக்கு எதிரே திருமுக்கூடல் என்ற திருத்தலமும் அமைந்துள்ளது. பாலாறு, வேகவதி, செய்யாறு ஆகிய மூன்றும் இங்கே ஒன்று சேர்கின்றன. இந்த இடம் திரிவேணி சங்கமம் } பிரயாகை என்றெல்லாம் புகழப்படுகிறது. இத்தலம் "பத்மகிரி" என்றும் "சத்யவிரத சேத்திரம்' என்றும், முனிவர்கள் மரீச்சமுனி, அத்ரி இங்கு வழிபட்டு பெருமாளின் கருணையைப் பெற்றதாகவும் புராண வரலாறு கூறுகிறது.

அழகிய இயற்கை அழகுடன் அமைந்துள்ள இந்தக் கோயில் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும். கிழக்கு நோக்கிய கோயில். வாயிலில் கோபுரம் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. கோயிலுக்குள் நுழைந்தவுடன் அருள் வழங்கும் அகோபிலவல்லி தாயார் தரிசனம் கிடைக்கிறது.

கருவறையில் மேற்கு நோக்கி நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் தனது கரங்களில் சக்கரம், சங்கு தாங்கி காட்சி தருகிறார். கீழ் வலது கை அபயம் அளிக்கும் கோலத்திலும் இடது கை மகாலட்சுமியை அணைத்தவாறும் காட்சி தரும் அற்புத திருவடிவைக் கண்டு வணங்கி நலம் அடையலாம். இந்தக் கோயிலில் ஆண்டாள், நிகமாந்த மஹா தேசிகர், வீர ஆஞ்சநேயர் சந்நிதிகளும் அமைந்துள்ளன. பிரதோஷம், சுவாதி நட்சத்திர நாளில் இத்தலத்தில் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது. தீராத நோயினால் துன்பப்படுபவர்கள் வழிபட்டு நலமடைகின்றனர்.

காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோயிலில் வழிபடும் திருமேனி இத்தலத்திலிருந்து எடுத்து வரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனை நினைவூட்டும் வகையில் தைப் பொங்கல் திருநாளில் வரதராஜர் இங்கு எழுந்தருளும் வைபவமானது "மலை உற்சவம்' என நடைபெறுகிறது. அன்றைய நாளில் பழையசீவரம் திருமுக்கூடல், சாலவாக்கம், காவாந்தண்டலம், காஞ்சி வரதராஜர் ஆகிய ஐந்து கோயில்களின் பெருமாள்களும் பாலாற்றுக்கு எழுந்தருள்வர்.

இத்தலத்தில் பிரம்மோற்சவம் (ஆனி) பவித்ரோத்சவம் (ஆவணி), நரசிம்ம ஜெயந்தி விழாக்கள் நடைபெற்று வருகின்றன.

விமானம் சாலாஹார விமானமாக அமைந்து, திருமாலின் பத்து அவதாரங்கள் சுதை உருவங்களாக அழகுடன் அமைந்து காட்சி தருகின்றன.

கோயில் கல்வெட்டு

களில் இவ்வூர் "சீயபுரம்' எனவும், "ராஜேந்திர சோழ விண்ணகர் சிங்கப்பிரானாழ்வார்' எனவும் அழைக்கப்படுகிறது. முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கோயில் எடுக்கப்பட்டது. "சீயம்" என்பது நரசிம்மருக்கு வழங்கப்படும் பெயர். இத்தலம் சீயபுரம் என முன்னர் அழைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது "பழையசீவரம்' என அழைக்கப்படுகிறது.

மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில், "திரிபுவன வீர சதுர்வேதி மங்கல திருமாலிருஞ்சோலை ஆழ்வார்' என பெருமாள் அழைக்கப்படுகிறார். சேதிராயன் என்பவரால் இக்கோயில் திருப்பணி செய்யப்பட்டது. இதற்காக "வைகாசன காணி" என்ற பெயரில் நிலம் தானமாக அளிக்கப்பட்டது.

மலை மீது கோயிலுக்கு காரில் செல்ல பாதை உள்ளது. செங்கல்பட்டு} காஞ்சிபுரம் செல்லும் சாலையில், இந்தத் தலம் அமைந்துள்ளது.

}கி. ஸ்ரீதரன்,

தொல்லியல் துறை (பணி நிறைவு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com