/

குழந்தைப்பேறு அருளும் இறைவன்

சுமார் 1200 வருடங்கள் பழைமையான கோயில்.

News image
Updated On :1 மே 2026, 10:36 am

தொண்டை நாட்டில், திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் ஆரணி நதிக்கரையில் மேற்குப் பார்த்து அமைந்துள்ளது அருள்மிகு ஐமுக்தீஸ்வரர் திருக்கோயில். சுமார் 1200 வருடங்கள் பழைமையான கோயில்.

ஒருநாள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய அனைத்து பஞ்சபூதங்களும் ஒன்றிணைந்து சிவபெருமானைக் காண கயிலாயம் சென்றன. அப்போது காலமில்லா நேரத்திலும், நந்தி தேவரின் அனுமதி பெறாமலும் சிவபெருமானை வழிபட முயன்றபோது, சிவபெருமான் கடும் கோபம் கொண்டு ஐந்து பூத தேவதைகளையும் குரங்குகளாக மாற சாபம் அளித்தார். அதன்படி அத்தேவதைகளும் குரங்குகளாக மாறினர்.

தங்கள் தவறை உணர்ந்த ஐந்து குரங்கு தேவதைகள் மீண்டும் பழைய உருவம்பெற சிவபெருமானிடம் மன்றாடினர். சிவபெருமானும் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, சாப விமோசனம் பெற வேண்டுமாயின் ஐந்து குரங்கு

களும் பூலோகம் அடைந்து, அங்கு செண்பக வனம் எனும் ஊரில் ஓடும் ஆரணி நதிக்கரையில் நீராடி, மேற்குநோக்கி வீற்றிருக்கும் சிவபெருமானை பூஜித்து வந்தால் முக்தி அடைவீர்கள் என்றார்.

எங்கு தேடியும் அவர்களால் சிவலிங்கத்தைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. பின்னர் வால்மீகி முனிவரின் துணைகொண்டு சிவலிங்கத்தைக் கண்டுபிடித்து, பிரதிஷ்டை செய்து நன்முறையில் பூஜித்து வந்தனர்.

இதனால் மகிழ்ச்சியுற்ற சிவபெருமான் அந்த ஐந்து குரங்குகளுக்கு சாப விமோசனம் அளித்து தன்னுள்ளே முக்தி அடையுமாறு அருளினார். இக்காரணத்தினால் தான் இச்சிவாலய சிவபெருமானின் பெயரானது ஐமுக்தீஸ்வரர் என வழங்கப்படுகிறது.

கருவறையில் சுவாமி ஐமுக்தீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். வடமொழியில் பஞ்ச பூதேஸ்வரர். அம்பாள் அன்னபூரணாம்பிகை தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார். சுவாமி நோக்கி திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் அருள்பாலிக்கிறார்கள். பத்துத் தூண்கள் கொண்ட கோயில். இத்தூண்களில் விநாயகர், சிவலிங்கம், சரஸ்வதி, வேல், ராமர், மயில், ஆஞ்சநேயர் புடைப்புச் சிற்பமாக உள்ளது. கோயிலில் நடராஜர் சிலையும் உள்ளது.

கீழ் வாசல் கோபுரம், கொடிமரம், அடுத்து நந்திதேவர் உள்ளனர். மேற்கு வாசல் பக்கம் சூரியன் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் விநாயகர், ஐயப்பன், வள்ளி, தேவயானை சமேத சண்முகர், சனீஸ்வர பகவான் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார்கள்.

சுவாமி சந்நிதி சுற்றுச் சுவர் வெளிப்பக்கம் துர்கை, பிரம்மன், விஷ்ணு, தட்சிணாமூர்த்தியும், அடுத்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள், ஆஞ்சநேயர், காலபைரவர், நவகிரக சந்நிதிகளும் உள்ளன.

தல விருட்சம் மா, பலா, வில்வ மரம். சிவாலயத்துக்குரிய அனைத்து உற்சவங்களும் இங்கு நடைபெறுகின்றன. சித்ரா பெüர்ணமியை முன்னிட்டு மே 1}ஆம் தேதி காலை 9 மணிக்கு சிறப்பு வழிபாடுகளும், மாலை 6 மணி அளவில் திருக்கல்யாண உற்சவமும், தொடர்ந்து சுவாமி, அம்பாள், பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடைபெறும்.

இவ்வாலய இறைவனை தொடர்ந்து 11 பிரதோஷ தினம் வழிபட்டால் திருமணத் தடை அகலும், தொடர்ந்து 21 பிரதோஷ தினம் வழிபட்டால் குழந்தைப்பேறு கிட்டும்.

தரிசனத்துக்காக காலை 6.30 மணி முதல் பகல் 11மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 8 மணி வரை திறந்திருக்கும் ஐமுக்தீஸ்வரர் திருக்கோயில் பெரியபாளையம் பேருந்து நிலையம் அருகில் உள்ளது.

எம். எஸ். வி.அருண்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.