பீஜிங்: இந்திய அரசாங்கத்தினால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை சீனாவில் உள்ள இந்திய வங்கிகளில் டெபாசிட் செய்ய முடியாது என்று இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ஆம் தேதி இரவு அன்று 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து வரும் டிசம்பர் 30-ஆம் தேதிவரை மக்கள் தங்கள் கைவசம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக சீனாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்திய அரசாங்கத்தினால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை சீனா மற்றும் ஹாங்காங்கில் உள்ள இந்திய வங்கிகளில் டெபாசிட் செய்ய முடியாது
இங்குள்ள இந்திய மக்கள் தங்கள் கைவசம் உள்ள ரூபாய் நோட்டுகளை, இந்தியாவில் உள்ள ஒருவர் அங்குள்ள தங்கள் வங்கி கணக்கில் டெபாசிட் செய்வதற்கு அதிகாரமளித்து எழுத்து பூர்வ கடிதம் ஒன்றை அளித்து, அதன்மூலம் பணத்தினை டெபாசிட் செய்து கொள்ளலாம்.
அந்த குறிப்பிட்ட நபர் அந்த கடிதம் மற்றும் தன்னுடைய அடையாள அட்டையுடன் சென்று பணத்தினை டெபாசிட் செய்யலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.