பாகிஸ்தானுக்கு விடுக்கப்படும் எந்த விதமான நேரடியான மறைமுகமான சவால்களையும் சந்திக்க பாகிஸ்தான் தயாராக இருப்பதாக அந்நாட்டு ராணுவ தளபதி ரஹீல் ஷரிஃப் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரின் உரி ராணுவ முகாமில் நேற்று நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 18 ராணுவ வீர்ரகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான்தான் காரணம் என்று இந்தியா குற்றம் சாட்டியுள்ள நிலையில் பாகிஸ்தான் அதனை மறுத்து வருகிறது.
இந்த நிலையில் ராவல்பிண்டியில் இன்று நடைபெற்ற ராணுவ கமாண்டர்களுக்கான கருத்தரங்கு ஒன்றில் அந்நாட்டு ராணுவ தலைமை ராணுவ தளபதி ரஹீல் ஷரிஃப் கலந்து கொண்டு பேசியதாவது:
பிராந்தியத்தில்நடைபெற்றுவரும் சம்பவங்களை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இதனால் பாகிஸ்தானின் பாதுகாப்புக்கு உண்டாகும் அச்சுறுத்தல்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம்.
எந்த சூழலையும் எதிர்கொள்ள பாகிஸ்தான் ராணுவம் தயாராக உள்ளது என்றும் அவர் திருப்தி தெரிவித்தார்.
பாகிஸ்தான் மீது விடுக்கப்படும் எந்த விதமான நேரடியான மற்றும் மறைமுகமான தாக்குதல்களையும் எதிர்கொள்ள ஆயத்த நிலையில் பாகிஸ்தான் ராணுவம் தயார் நிலையில் உள்ளது.
இவ்வாறு ரஹீல் ஷரிஃப் பேசியதாக பாகிஸ்தான் நாளிதழ் எக்ஸ்பிரஸ் டிரிபியூட் செய்தி வெளியிட்டுள்ளது.