அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே ஆக்கப்பூர்வமான உறவு நிலவ வேண்டும் என்று சீன அதிபருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து சீன அதிபர் ஜீ ஜின்பிங் கடிதம் எழுதியிருந்தார். இதயைடுத்து, சீன அதிபரின் வாழ்த்துக்கு பதிலளிக்கும் வகையில் அதிபர் டிரம்ப் கடிதம் எழுதியுள்ளார்.
சீன மக்களுக்கு அமெரிக்க மக்கள் சார்பிலும் எனது சார்பிலும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே ஆக்கப்பூர்வமான உறவு நிலவ வேண்டும். நம் இரு நாடுகளிடையேயான நல்லுறவு மூலம் இரு நாட்டு மக்களும் பயன் அடைய வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் பதவியேற்றதும் சீனா, ரஷியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களோடு டிரம்ப் தொலைபேசியில் உரையாடினார். டிரம்ப் பதவியேற்றதும் அரசு முறையில் அவரை சந்தித்த முதல் உலகத் தலைவர் பிரிட்டன் பிரதமர் தெரஸா மே.
ஆனால் அதற்கும் முன்பாக, டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற்றதாக கடந்த நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டதுமே ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபே அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
சீனாவிலிருந்து பிரிந்த தைவான் தனி நாடு என்று கூறிக் கொண்டாலும், அதனைத் தங்களின் ஒருங்கிணைந்த பிரதேசம் என்று சீனா கூறி வருகிறது. தைவானுக்கு தனி நாடு அந்தஸ்து தரும் விதத்தில் அதன் அதிபருடன் டிரம்ப் உரையாடியதை சீனா வன்மையாக கண்டித்தது. இந்த நிலையில் அமெரிக்கா - சீனா நல்லுறவை வலியுறுத்தி டிரம்ப் கடிதம் எழுதியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.