

கைது நடவடிக்கையின் போது சரணடைய மறுக்கும் போதை மருந்து கடத்தல்காரர்களை போலீஸார் சுட்டுத் தள்ள வேண்டும் என இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ அதிரடியாக அறிவித்துள்ளார்.
இந்தோனேசியாவில் நடைபெற்ற அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்ற அதிபர் ஜோகோ விடோடோ இதுகுறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது: 25.5 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தோனேசியாவில் போதை மருந்து பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 60 லட்சமாக உள்ளது. போதைமருந்து கடத்தல் தடுப்பு பிரிவின் இந்த புள்ளிவிவரத்தின் மூலம் போதை மருந்து பிரச்னை எவ்வளவு தீவிரமாக உள்ளது என்பதை அறியலாம்.
இதனை உணர்ந்தே, அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்துக் கட்ட அரசு உறுதி பூண்டுள்ளது. போதை மருந்து கடத்தல்காரர்கள் மீது போலீஸார் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உள்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டவர்களும் இந்தோனேசியாவுக்குள் நுழைந்து போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டால் அவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். குறிப்பாக, போதை மருந்து கடத்தல்காரர்கள் போலீஸாரிடம் பிடிபட்டு கைதாவதற்கு ஒத்துழைக்க மறுத்தால் அவர்களை சுட்டுத் தள்ளுங்கள் என்றார் அவர்.
ஆனால், அதிபரின் இந்த உத்தரவுக்கு அங்குள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.
இந்தோனேசிய சட்டப்படி ஒரு நபர் ஐந்து கிராம் போதைப் பொருளை வைத்திருந்தாலே அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.
அந்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வெளிநாட்டவர் உள்பட 18 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.