நியூயார்க்: பல்வேறு அலுவலக பயன்படுகளுக்கு ஏற்ற வகையில், தனது ஊழியர்களின் உடலில் ரேடியோ அதிர்வெண் அடிப்படையில் இயங்கும் 'சிப்' பொருத்துவது என்று அமெரிக்க நிறுவனம் ஒன்று முடிவு செய்திருக்கிறது.
'த்ரீ ஸ்கொயர் மார்க்கெட்' என்பது அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தொழில்நுட்ப நிறுவனமாகும். இந்த நிறுவனமே தற்பொழுது தனது ஊழியர்ககளின் உடலில் ரேடியோ அதிர்வெண் அடிப்படையில் இயங்கும் 'சிப்' பொருத்துவது என்று முடிவு செய்துள்ளது. இதற்காக ஸ்வீடனைச் சேர்ந்த 'பயோ ஹாக்ஸ்' என்னும் மற்றுமொரு நிறுவனத்துடன் சேர்ந்து இது திட்டம் தீட்டி வருகிற்து.
இது குறித்து த்ரீ ஸ்கொயர் மார்க்கெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாட் வெஸ்ட்பை நிறுவன வலைப்பூ பதிவு ஒன்றில் எழுதியிருப்பதாவது:
ரேடியோ அதிர்வெண் அடிப்படையில் இயங்கும் 'சிப்' தொழில்நுட்பமே இனி உலகில் மிக முக்கியமான ஒன்றாக இருக்குமென்று கருதுகிறோம். எனவே அதனை முன்மாதிரியாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த சிப் பொருத்தும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு அரிசி அளவுள்ள சிப்பானது உங்கள் கட்டை விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்குமிடையே, தோலுக்கு அடியில் சில நொடிகளில் பொருத்தப்படும். இதனைக் கொண்டு நீங்கள் அலுவலகத்தில் கதவுகளைத் திறத்தல், கணினிகளில் 'லாக் இன்' செய்தல், அலுவலகத்தின் நகல் இயந்திரத்தினை பயன்படுத்துதல், அலுவலக அங்காடியில் பொருட்கள் வாங்குதல் மற்றும் தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை சுலபமாகச் செய்ய முடியும்.
இந்த சிப்பானது நவீன கடன் அட்டைகள் மற்றும் சில குறிப்பிட்ட அலைபேசிகளில் பணம் செலுத்துவதற்கு பயன்படுத்தப்படும் 'நியர் பீல்ட் கம்யூனிகேஷன்' என்னும் முறையினைப் பின்பற்றுகிறது. எனவே இந்த சிப்பினைக் கொண்டு நீங்கள் சில இடங்களில் பணம் செலுத்தவும் இயலும்.
ஊழியர்களுக்கு இந்த சிப்பானது வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடக்கவுள்ள பிரத்யேக 'சிப் விழாவில்' பொருத்தப்படும். இதற்காக குறைந்த பட்சம் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தாமாக முன்வருவார்களென்று எதிர்பார்க்கப்படுகிறது
இவ்வாறு அந்த வலைப்பதிவு தெரிவிக்கிறது.
இந்த புதிய தொழில்நுட்பத்தினை வரவேற்கும் ஊழியர்கள், இந்த சிப்பானது உடலுக்குள் பொருத்தப்படுவதற்கு பதிலாக, உடலுக்கு வெளியே அணியக் கூடிய வகையில் மணிக்கட்டு பட்டை அல்லது மோதிர வடிவில் சிப் இருந்தால் நல்லது என்று எண்ணுகின்றனர்.