நேற்று காலை 7 மணி அளவில் பெர்த் திலிருந்து மலேசியாவுக்குப் புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் D7237 இயந்திரக் கோளாறால் நடுவானில் கடுமையான அதிர்வுகளுக்கு உட்பட்டு அதிலிருந்த நூற்றுக்கணக்கான பயணிகளை மரண பீதியில் ஆழ்த்திய பின் ஒருவழியாக இயல்பு நிலைக்கு மீண்டு பயணம் ரத்தாகி தரையிறக்கப் பட்டது. சம்பவத்தின் போது உள்ளிருந்த பயணிகள் பதிவு செய்திருந்த தகவல்களில் அடிப்படையில் சொல்வதென்றால் ஓடிக் கொண்டிருக்கும் வாஷிங் மெஷினின் மேற்பகுதியில் அமர்ந்தால் எப்படி இருக்கும்? அத்தகைய அதிர்வுகள் கிட்டத்தட்ட 90 நிமிடங்களுக்கு விமானத்தில் நீடித்தது. என்ன செய்வதென்று புரியாத பயணிகளில் சிலர் மரண பயத்தில் ஆழ்ந்திருக்க சிலரோ அந்த நேரத்திலும் அதைப் பதிவு செய்து இன்ஸ்டகிராமில் பகிரும் வேலையைச் செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் பைலட்டிடமிருந்து வந்த செய்தி அந்தச் சூழலில் மேலும் அச்சமூட்டுவதாக இருந்தது.
விமானம் அதிர்வுக்குள்ளான வீடியோ பதிவு...
‘பயணிகள் கவனிக்கவும்... நான் சொல்வதை கவனமாகக் கேளுங்கள்... நீங்கள் அளிக்கும் ஒத்துழைப்பில் தான் நமது பாதுகாப்பும், உயிர் பிழைத்தலும் இருக்கிறது.’ என்று அறிவிக்க அதைத் தொடர்ந்து பைலட் சொல்வதைத் தவிர எதையும் செய்ய இயலாத பயணிகள்... கவலையான முகங்களுடன் வினோதமாகக் குலுங்கிக் கொண்டிருக்கும் அந்த விமானத்தில் அவரவர் கடவுளரைப் பிரார்த்தித்தவாறு அமர்ந்திருக்க 90 நிமிடங்களுக்குப் பிறகு ஒருவழியாக அந்தக் குறிப்பிட்ட ஏர் ஏசியா விமானம் சகஜ நிலைக்கு மீண்டது. உடனடியாகத் தரையிறக்கப் பட்ட விமானத்தில் என்ன கோளாறு எனத் தற்போது ஆராய்ந்து வருகிறார்கள்.
மூன்றாண்டுகளுக்கு முன்பு ஏர் ஏசியா விமானம் ஒன்று இயந்திரக் கோளாறால் கடுமையான விபத்துக்குட்பட்டு ஜாவா கடலில் விழுந்து மூழ்கியது. அதில் பயணித்த அத்தனை பேரும் மாண்டனர். அந்த விபத்துக்கு மோசமான rudder control system தான் காரணமென அப்போது கூறப்பட்டது. இந்த விமானத்தில் நேற்று அதிகாலையில் நடந்த இந்தக் கோளாறுக்கான காரணங்களை விமான தொழில்நுட்பக் குழு ஆராய்ந்து வருகிறது. நடுவானில் இயந்திரக் கோளாறு காரணமாக 90 நிமிடங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு போராடிய அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாத பயணிகள் தற்போது; “நான் மீண்டு விட்டேன்... நம்ப முடியவில்லை’ ரீதியில் முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என ஸ்டேட்டஸ் தட்டிக் கொண்டிருக்கிறார்கள்.