
கொழும்பு: இருநாடுகளுக்கு நடைபெறும் சண்டையைக் காட்டிலும் வெறுப்பிலும் வன்முறையிலும் ஊறித் திளைக்கும் மனநிலையே உலக அமைதிக்கு பெரிய சவலாகத் திகழ்வதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை சென்றுள்ளார். அங்கு தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
இன்றைய சூழலில் சர்வதேச சமூகத்தின் அமைதிக்கு மிகப்பெரும் சவாலாக இருப்பது இரண்டு நாடுகளுக்கு இடையேயான சண்டை கிடையாது. எப்பொழுதும் வெறுப்பிலும் வன்முறையிலும் ஊறிய மனநிலையும், தவறான எண்ண ஓட்டங்களும், போர்க் கருவிகளுமே உலக அமைதியை சிதைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
புத்த பிரானின் தத்துவங்கள் நல்லாட்சிக்கு பல்வேறு வழிவகைகளை நமக்கு வகுத்துத் தந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக இந்தியா, இலங்கை ஆகிய இருநாடுகளுமே புத்தரின் தத்துவங்களால் பயனடையும் வகையில் ஒரே பிராந்தியத்தில் அமைந்துள்ளன.
இவ்வாறு மோடி பேசினார்.
இதே நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இலங்கை பிரதமர் விக்ரமசிங்கே, 'பிரதமர் மோடியின் வருகையால் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைவதாக கூறினார். மேலும் புத்தரின் படிப்பினைகள் எல்லா காலகட்டத்திற்கு பொருத்தமாக அமைந்திருக்கிறது. புத்த மதமானது அஹிம்சையையும் சமூக நீதியை நிலைநிறுத்துதலையுமே வலியுறுத்துகிறது' என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.