2050-ல் என்ன நடக்கும்? சென்னை கடலில் மூழ்கப் போகிறதா? ஒரு பகீர் ரிப்போர்ட்!

உலகம் வெப்பமயமாவதால் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து வருகிறது.
2050-ல் என்ன நடக்கும்? சென்னை கடலில் மூழ்கப் போகிறதா? ஒரு பகீர் ரிப்போர்ட்!
Updated on
2 min read

உலகம் வெப்பமயமாவதால் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. இதன் பாதிப்பு உலகெங்கும் உள்ள கடற்கரை நகரங்களில் பிரதிபலிக்கும், 2050-ம் ஆண்டுக்குள் சென்னையும் மூழ்கலாம் என ஆய்வில் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறையின் கீழ் பருவநிலை மாற்றம் தமிழக செயல்திட்டம் என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் ஒரு பிரிவாகவுள்ள தமிழ்நாடு மாநில நிலம் பயன்படுத்துதல் ஆராய்ச்சி வாரியம் தமிழக இயற்கை சூழ்நிலைகள் குறித்து ஒரு ஆய்வினை நடத்தி உள்ளது. பருவநிலை மற்றும் உலக வெப்பமயமாதல் காரணமாக தமிழ்நாட்டில் ஏற்படும் விளைவுகள் குறித்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில் உலக வெப்பமயமாதலால் தமிழ்நாட்டில் அதுவும் குறிப்பாகச் சென்னையில் பெரும் பாதிப்புக்கள் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக வெப்பமயமாதலின் காரணமாக மேற்கு அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் மெள்ள மெள்ள உருகி வருகின்றன. இப்பகுதியில் கடலுக்கு அடியிலும், அதன் மேற்பகுதியிலும் அதிகளவில் பனிப்பாறைகள் உள்ளன. அவை தற்சமயம் உருகி வருகிறது. இதனால் 2050-ம் ஆண்டில் கடல் மட்டம் 4.8 மீட்டர் எனும் அளவுக்கு உயரக் கூடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். போலவே கிழக்கு அண்டார்டிகாவிலுள்ள பனிப்பாறைகள் அதி வேகமாக உருகி வருகின்றன. இதனால் கடல் நீர்மட்டம் 3.4 மீட்டர் உயரும் என்றும் இந்த ஆய்வில் கண்டறிந்துள்ளனர். நிலப்பரப்பை கடல் விழுங்குவதால் இதில் 50-லிருந்து 55 சதவிகிதம் வரை அதிக பாதிப்புக்கள் ஏற்படும் என்றும் அந்த ஆய்வில் தெரிகிறது. தவிர கடல் மட்டம் உயர்வதால் கடல் அரிப்பு அதிகரிக்கும். இதனால் கடற்கரை பகுதியும் சிறிது சிறிதாக அழியும் நிலைக்குத் தள்ளப்படும். கடல் சீற்றம் அதிகரித்து பலவித இன்னல்களுக்கு சென்னை ஆளாகும் என்கிறது ஆய்வு.

மேற்கூறிய பிரச்னைகளால் உலகம் முழுவதிலும் கடல் நீர்மட்டம் உயர்ந்துவிடும். இதனால் பல்வேறு பாதிப்புகளை ஏற்படும். தமிழ்நாட்டைப் பொருத்தவரையில், 2050-ம் ஆண்டு தமிழ்நாட்டு கடலோர பகுதியில் 4.35 மீட்டரில் இருந்து 6.85 மீட்டர் வரை நீர்மட்டம் உயரும் என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதனால் சுமார் 1963 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு பகுதிகளை கடல் விழுங்கி விடுமாம். சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு கடற்பகுதிக்குள் சென்றுவிடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.  இப்பகுதியில் வாழும் 10 லட்சம் மக்கள் வாழ்விடத்தை இழந்து வெளியேற வேண்டிய கட்டாயச் சூழ்நிலை ஏற்படும் என்றும் தெரிகிறது. காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் 5 லட்சம் பேர் வெளியேறும் நிலை உருவாகும் என்கிறது இந்த ஆய்வு. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com