கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!இன்னும் ஒரு வாரத்துக்குள் அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வரும்: டிரம்ப்மேக்கேதாட்டு அணை: விரைந்து அனுமதி வழங்க பிரதமரிடம் சிவகுமார் கோரிக்கைமேட்டூர் அணையைத் திறக்கக்கோரி தவெக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்
/

நச்சுத் தாக்குதலுக்குள்ளான உளவாளியின் மகள் தொலைபேசியில் பேசினார்: ரஷியா

பிரிட்டனில் நச்சுத் தாக்குதலுக்குள்ளான முன்னாள் உளவாளி செர்கெய் ஸ்கிரிபாலின் மகள் யூலியா , ரஷியாவிலுள்ள தனது உறவினருடன் தொலைபேசியில் பேசியதாக ரஷிய அரசுத் தொலைக்காட்சி

News image
Updated On :6 ஏப்ரல் 2018, 12:55 am IST

பிரிட்டனில் நச்சுத் தாக்குதலுக்குள்ளான முன்னாள் உளவாளி செர்கெய் ஸ்கிரிபாலின் மகள் யூலியா , ரஷியாவிலுள்ள தனது உறவினருடன் தொலைபேசியில் பேசியதாக ரஷிய அரசுத் தொலைக்காட்சி வியாழக்கிழமை தெரிவித்தது.
ரஷியாவைச் சேர்ந்த செர்கெய் ஸ்க்ரிபால் (66), கடந்த 1990-ஆம் ஆண்டுகளில் அந்த நாட்டின் ராணுவ உளவு அமைப்பில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், பிரிட்டனின் உளவுப் பிரிவான எம்ஐ6-இலும் ரகசியமாக இணைந்த அவர், ரஷிய ராணுவ உளவுத் துறையில் பணியாற்றும் வாய்ப்பைப் பயன்படுத்தி பிரிட்டனுக்கு ரகசியத் தகவல்களை அளித்து வந்தார்.
எனினும், அவரது நடவடிக்கையைக் கண்டுபிடித்த ரஷிய அதிகாரிகள், 2004-ஆம் ஆண்டு செர்கெய் ஸ்கிரிபாலை கைது செய்து சிறையிலடைத்தனர்.
இந்த நிலையில், உளவுக் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட செர்கெய் ஸ்கிரிபால், பிரிட்டனில் வசித்து வருகிறார்.
இந்தச் சூழலில், செர்கெய் ஸ்க்ரிபால் மற்றும் அவரது 33 வயது மகள் யுலியா மீது கடந்த மாதம் 4-ஆம் தேதி நச்சுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டு, அவர்கள் உயிருக்குப் போராடி வருகின்றனர். இந்தத் தாக்குதலுக்கு ரஷியாதான் காரணம் என்று பிரிட்டன் குற்றம் சாட்டி வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக பிரிட்டனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகள் ஆகியவை தங்கள் நாடுகளிலிருந்து 150-க்கும் மேற்பட்ட ரஷியத் தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு உத்தரவிட்டன.
இதனால், ரஷியாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான உறவில் கடும் பதற்றம் நிலவி வருகிறது.
இந்தச் சூழலில், ரஷியாவிலுள்ள தனது உறவினர் விக்டோரியாவுடன், நச்சுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டு கோமா நிலையில் மருத்துமனையில் சிகிச்சைப் பெற்று வந்த யூலியா ஸ்கிரிபால் தொலைபேசியில் பேசியதாக ரஷிய அரசுத் தொலைக்காட்சி வியாழக்கிழமை தெரிவித்தது.
மேலும், அந்த தொலைபேசி உரையாடலின் ஒலிப் பதிவையும் அந்தத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
அந்த உரையாடலில், தானும், தனது தந்தையும் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பவிருப்பதாகவும் யூலியா தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது.
எனினும், இந்தத் தகவலை பிரிட்டன் அதிகாரிகள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.