புதுதில்லி: பிரபல சமூக வலைதளமான பேஸ்புக்குக்கு போட்டியாக "ஹலோ" என்னும் புதிய செயலி இந்தியாவில் புதனன்று அறிமுகமாகியுள்ளது.
உலகின் பிரபல சமூகவலைதளமாக இருப்பது பேஸ்புக் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் இதனைப் பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் பேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் திருடப்படுவதாக சமீபத்தில் பெரும் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் எழுத்துப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்தான் பேஸ்புக்குக்கு போட்டியாக "ஹலோ" என்னும் புதிய செயலி இந்தியாவில் புதனன்று அறிமுகமாகியுள்ளது. உலகின் முதல் பரவலான சமூக வலைதளமாக அறிமுகமானது கூகுளின் 'ஆர்குட்.காம் '. கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பொறியாளரான ஆர்குட் பையுகோக்டன் என்பவர் இதனை உருவாக்கினார். அவர் பெயராலேயே இது அழைக்கப்பட்டு வந்தது.
பரவலான கவனம் பெற்று வந்த ஆர்குட் சேவையானது பேஸ்புக் வருகைக்கு பிறகு புகழ் மங்கத் துவங்கியது. படிப்படியாக வரவேற்பினை இழந்த ஆர்குட் சேவையை 30.09.2014 அன்று கூகுள் நிறுத்திக் கொண்டது. தற்பொழுது இதே ஆர்குட் பையுகோக்டன்தான் பேஸ்புக்குக்கு போட்டியாக "ஹலோ" என்னும் புதிய செயலியினை புதன் அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ஆர்குட் பையுகோக்டன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஹலோ சேவையானது ஒத்த கருத்துள்ள மனிதர்களை அவர்களது ஆர்வங்கள் மூலமாக ஒன்றிணைப்பதன் மூலம், நேர்மறையான, அர்த்தமுள்ள மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தொடர்புகளை சமூகவெளியில் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நிஜ உலகத்தில் தொடர்புகளை உருவாக்கவே நாங்கள் இதனை வடிவமைத்துள்ளோம். இது அன்பால் உருவாக்கப்பட்டுள்ளது; ‘லைக்குகளால்’ இல்லை. எனவே இதன் மூலம் இந்தியாவுக்கு மீண்டும் 'ஹலோ' சொல்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
தற்பொழுது உள்ள சமூக ஊடக செயலிகள் அனைத்தும் ஒருவர் மற்றொருவருடன் நேரடி வாழ்வில் பழகுவதற்கும், சமூக ஊடகங்களில் பழகுவதற்கும் வித்தியாசம் இருப்பது போல செய்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியானது மனிதர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு மேம்பட்டவர்களாக மாறுவதற்கு உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது "ஹலோ" செயலியானது ஆப்பிள் ஸ்டோர் மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோர்களில் கிடைக்கிறது.