ஐநா பாதுகாப்பு கௌன்சில் அவசர கூட்டத்துக்கு ரஷியா அழைப்பு
சிரியாவில் ஏற்பட்டுள்ள கடும் போர் பதட்டங்களுக்கு நடுவில் ஐநா பாதுகாப்பு கௌன்சில் கூட்டத்தை அவசரமாக கூட்டுவது தொடர்பாக ரஷியா அழைப்பு விடுத்துள்ளது.
சிரியா அதிபர் அல்-அஸாதின் தலைமையிலான படைகள் மீது அமெரிக்கா மற்றும் கூட்டுப் படைகள் தாக்குதல் நிகழ்த்துவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாகிக் கொண்டே வருவதாகக் கூறப்படுகிறது.
சிரியா போரில் அமெரிக்கக் கூட்டுப் படைகள் ஈடுபடுவது புதிதில்லை என்பதாலும், ஏற்கெனவே சிரியா அரசின் விஷ வாயுத் தாக்குதலுக்குப் பதிலடியாக அந்த நாட்டு விமான தளத்தில் அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியிருப்பதாலும், சிரியா ராணுவ நிலைகளை நோக்கி விரைவில் அமெரிக்க ஏவுகணைகள் பாயலாம் என்றும் சிலர் எதிர்பார்க்கின்றனர்.
சிரியா படைகளோடு இணைந்து ரஷியாவும் சண்டையிட்டு வரும் நிலையில், அந்தப் படையினர் மீதான தாக்குதல் ரஷியாவுக்கும் எதிரானதாகக் கருதப்படும். இதையடுத்து, வீசப்படும் அமெரிக்க ஏவுகணைகளையும், அந்த ஏவுகணைகள் வீசுவதற்குப் பயன்படும் அமெரிக்க போர்க் கப்பல்கள், விமானங்களையும் ரஷியா தாக்கி அழிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ஐநா பாதுகாப்பு கௌன்சில் கூட்டத்தை அவசரமாக கூட்டுமாறு ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் சனிக்கிழமை அழைப்பு விடுத்துள்ளார்.