பாகிஸ்தானில் 11-ஆவது பொதுத் தேர்தல் புதன்கிழமை காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. ஒரு வகையில் இந்த தேர்தல் மூலம் பாகிஸ்தான் ஒரு வரலாற்றுச் சிறப்பு பெருமையை பெற்றுள்ளது.
பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தின் குஷாப் எனும் நகரில் ஒரு கிராமம் உள்ளது. அந்த கிராமத்தின் வழக்கப்படி வீட்டுக்கு வெளியே நிகழும் எந்த நிகழ்விலும் பெண்கள் பங்கேற்ககூடாது. அதனால், அவர்கள் வாக்களிப்பதற்கும் வீட்டை விட்டு வெளியே வரமாட்டார்கள். இதனால், சுதந்திரம் பெற்றதில் இருந்து அந்த கிராம பெண்கள் தேர்தலில் வாக்களித்ததே கிடையாது.
ஆனால், நடப்பு பொதுத் தேர்தலில் அந்த கிராம பெண்கள் வாக்களிப்பதற்கு வீட்டை விட்டு வெளியே வந்துள்ளனர். அவர்கள், புதன்கிழமை காலை அருகில் வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை செலுத்தி சென்றனர்.
இதன்மூலம், அந்த கிராம பெண்கள் சுதந்திரம் பெற்ற 70 ஆண்டு காலத்தில் முதன்முதலாக தங்களது உரிமையை நிலை நாட்டியுள்ளனர். அந்த வகையில், நடப்பு தேர்தல் ஒரு வரலாற்றுப் பெருமையை அடைந்துள்ளது.
இந்த தேர்தலில், மொத்தம் 10 கோடி 56 லட்ச வாக்காளர்கள் உள்ளனர். அதில், பெண் வாக்காளர்கள் 4 கோடி 76 லட்சம் பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. காலை 8 மணிக்கு தொடங்கிய தேர்தல் மாலை 6 மணி வரை இடைவிடாது நடைபெறவுள்ளது.