அமெரிக்காவின் 'ஸீரோ டாலரன்ஸ்' நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிரபல டைம் நாளிதழ் வெளியிட்டுள்ள அட்டைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவுக்கு அகதிகளாக குடியேறுபவர்களின் குழந்தைகள் எல்லைப்பகுதிகளிலேயே பிரிக்கப்பட்டு தனி முகாம்களில் தங்கவைக்கப்பட்டன. மேலும் அகதிகள் அனைவரும் குற்றவாளிகளாகவும், அந்தக் குழந்தைகள் ஆதரவற்றவர்களாகவும் அறிவிக்கப்பட்டனர். 'ஸீரோ டாலரன்ஸ்' எனும் அடிப்படையில் அமெரிக்கா எடுத்து வரும் இந்த நடவடிக்கைக்கு பலத்த எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இம்முடிவை தளர்த்தும் நிலைக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தள்ளப்பட்டுள்ளார்.
இந்நிலையில், டொனால்டு டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்நாட்டின் பிரபல டைம் பத்திரிகை நாளிதழ், ஜூலை 2 பிரதியின் அட்டைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டது. இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிரபல புகைப்படக்கலைஞர் ஜான் மூர் என்பவர் எடுத்த புகைப்படம் விருதுகளைக் குவித்து வருகிறது.
இதில், ஒரு அகதியின் 2 வயது பெண் குழந்தை அழுதுகொண்டு இருக்கும் அந்தப் புகைப்படத்துடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-ஐ இடம்பெறச் செய்து, 'அமெரிக்கா உங்களை அன்புடன் வரவேற்கிறது' என்ற வாசகத்துடன் தலைப்பிட்டு டைம் நாளிதழ் வெளியிட்டுள்ளது.