கேரள சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோரது ஊதியம் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டு பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கேரளாவில் பினரயி விஜயன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த 2012-ஆம் ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், விலைவாசி ஏற்றத்தை கருத்தில் கொண்டு மீண்டும் ஊதியம் உயர்த்த முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து திருத்தப்பட்ட புதிய ஊதிய நிர்ணயம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஜேம்ஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் புதிய ஊதியம் தொடர்பான தீர்மானம் கேரள சட்டப்பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த புதிய ஊதிய திட்டத்தின் அடிப்படையில் அமைச்சர்களின் ஊதியம் மற்றும் படிகள் ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.90 ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்பட்டது. அதுபோல சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் படிகள் ரூ.39 ஆயிரத்து 500-ல் இருந்து ரூ.70 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த புதிய ஊதியம் வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக கேரள அரசு அறிவித்துள்ளது.