அமெரிக்கா மற்றும் வடகொரியா நாடுகளுக்கு இடையில் அமைதியை நிலை நாட்ட இருநாட்டு அதிபர்களும் ஜூன் 12-ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் சந்திப்பின்போது பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. 1953 கொரிய போருக்கு பிறகு இருநாடுகளுக்கு இடையில் இரு தலைவர்கள் சந்திக்க இருந்தது இதுவே முதன்முறை. அதனால், இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பை நோக்கி உலகமே காத்திருந்தது.
இதற்கிடையில், வடகொரியா தனது அணு ஆயுத சோதனை கூடத்தை அழித்து விட்டதாக தெரிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-வுடனான சந்திப்பை ரத்து செய்வதாக டிரம்ப் அறிவித்தார். டிரம்பின் இந்த முடிவு வடகொரியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இருப்பினும், டிரம்புடனான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பேச்சுவார்த்தையை நடத்த வடகொரிய அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்து, வடகொரிய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கூறுகையில்,
"நாங்கள் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளும் எண்ணத்தில் இருப்பதை அமெரிக்காவுக்கு தெரிவிக்க விரும்புகிறோம். இந்த பேச்சுவார்த்தையை தடை செய்தது பியோங்யாங் மற்றும் வாஷிங்டன் இடையிலான பகையை காண்பிக்கிறது.
இருநாடுகளுக்கு இடையிலான பகையுறவை தீர்க்க இந்த சந்திப்பு மிகவும் அவசியமானது. டிரம்புடனான சந்திப்பு புதிய தொடக்கத்தை தரும் என்பதால் வடகொரிய அதிபர், அமெரிக்காவுடனான இந்த பேச்சுவார்த்தைக்காக அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளார். அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வடகொரியா தற்போதும் தயாராக தான் உள்ளது.
நாங்கள் எங்களது இலக்கில் இருந்து மாறவே இல்லை. கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட அனைத்தும் நடவடிக்கைகளையும் எடுப்போம். நாங்கள் குறுகிய மனநிலையில் இல்லாமல் தற்போதும் அமெரிக்காவுடன் பேச தயாராக உள்ளோம்" என்றார்.