ஹாங்காங்: சீனா மற்றும் ஹாங்காங்கை இணைக்கும் உலகின் மிக நீண்ட கடல் பாலமானது நாளை போக்குவரத்திற்கு திறக்கப்படுகிறது
இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட ஹாங்காங்கை, சீனாவுடன் கடல் வழியாக இணைக்கும் பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த பாலமானது உலகின் மிக நீண்ட கடல் பாலமாக கருதப்படுகிறது.
இந்த பாலம் பயன்பாட்டிற்கு வருவதன் மூலமாக சீனா-ஹாங்காங் இடையேயான பயண நேரம், 3 மணியிலிருந்து 30 நிமிடங்களாக குறைந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 'கிரேட்டர் வளைகுடா' என்ற அழைக்கப்படும் இந்த பிராந்தியத்திற்கான சீன வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் பாலம் கருதப்படுகிறது.
சுமார் 68 மில்லியன் மக்களை இணைக்கும் இந்த பாலம், சுற்றுலாப் பயணிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் பயணம் செய்ய வேண்டுமெனில் சிறப்பு வாடகை கார்களையோ அல்லது விரைவுப் பேருந்தையோ பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டிலேயே திறப்பதாக திட்டமிடப்பட்ட இந்த பாலமானது திட்டப் பணிகளில் ஏற்பட்ட தொடர் தாமதங்களின் காரணமாக தற்போது திறக்கப்பட உள்ளது.