டோக்கியோ: இந்தியா-ஜப்பான் இடையே ரூ.1.83 லட்சம் கோடி அளவில் பணப் பரிமாற்ற ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்தியா-ஜப்பான் இடையேயான 13-வது வருடாந்திர உச்சி மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி சனிக்கிழமையன்று தனி விமானம் மூலம் டோக்கியோ சென்றடைந்தார். அவருக்கு அங்கே இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அங்கு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் மோடி இடையே உயர் மட்ட அளவிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இந்த பேச்சுவார்தையில் இருதரப்பு உறவு, பிராந்திய மற்றும் இந்தோ பசிபிக் பகுதியின் பிரச்னைகள் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் குறித்து இருவரும் பேச்சுவார்தை நடத்தினர்.
இந்நிலையில் இந்தியா-ஜப்பான் இடையே ரூ.1.83 லட்சம் கோடி அளவில் பணப் பரிமாற்ற ஒப்பந்தம் திங்களன்று கையெழுத்தாகியுள்ளது.
இதுகுறித்து ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு வெளியிடப்பட்ட இருதரப்பு வளர்ச்சிப் பார்வை ஒப்பந்தத்தில், 'இருதரப்புக்கும் இடையிலான நிதி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தும் பொருட்டு, இந்திய மற்றும் ஜப்பான் அரசுகள், ரூ. 1.83 லட்சம் கோடி அளவிலான பணப் பரிமாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை வரவேற்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்த ஒப்பந்தத்தின் மூலம் நமது அன்னியச் செலாவணி மற்றும் முதலீட்டுச் சந்தையில் நிலைத்தன்மை அதிகரிக்கும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .