ஜகார்தா: இந்தோனேஷியாவை கடந்த வெள்ளியன்று தாக்கிய சுனாமியால் பலியானோர்களின் எண்ணிக்கை 832 ஆக உயந்துள்ளது.
இந்தோனேஷியாவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமிக்கு 384 பேர் பலியாகினர்.
இதுகுறித்து அந்த நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நிலநடுக்கம் காரணமாக வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சுனாமியில் சிக்கி, இதுவரை 384 பேர் உயிரிழந்தனர். சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்ட பாலூ நகரில்தான் அத்தனை உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. சுனாமி தாக்கிய பகுதிகளில், இன்னும் ஏராளமானோர் மாயமாகியுள்ளதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும். இந்த இயற்கைப் பேரிடரில் 540 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று அந்த அமைப்பு தெரிவித்தது.
சுமார் 3.5 லட்சம் பேர் வசிக்கும் பாலூ நகரின் கடற்கரைப் பகுதியில் 1.5 மீட்டர் உயரத்துக்கு சுனாமி அலை வீசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேஷியாவின் தீவுகளில் ஒன்றான சுலாவெசியில் வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.5 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம், அங்கு 3 லட்சம் மக்கள் வசிக்கக்கூடிய டோங்கலா நகரை மையமாக கொண்டு, கடல் மட்டத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில், உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
சுலாவெசி தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்ததான. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சுலாவெசி மாகாணத் தலைநகரான பாலூ உள்பட பல்வேறு பகுதிகள் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சமீபத்திய தகவலின்படி இந்தோனேஷியாவை கடந்த வெள்ளியன்று தாக்கிய சுனாமியால் பலியானோர்களின் எண்ணிக்கை 832 ஆக உயந்துள்ளது.
மேலும் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேஷியாவில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கிய பல இடங்களிலும் தகவல் தொடர்பு சேவை முழுமையா முடங்கியுள்ளது.
இதன் காரணமாக உயிர்ச்சேதம், பொருட்சேதம் பற்றிய தகவல்கள் முழுமையாக வெளிவரவில்லை. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரும் வாய்ப்புள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.