அமெரிக்காவின் நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கம் அருகே துப்பாக்கிச்சூடு சப்தம் போன்ற பீதி ஏற்பட்டதால் அங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதனால் அப்பகுதியில் ஏற்பட்ட அமளியில் சில குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
கடந்த வாரத்தில் மட்டும் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மற்றும் ஓஹியோ பகுதிகளில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 31 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், செவ்வாய்கிழமை இரவு டைம்ஸ் சதுக்கம் அருகே பலமான சப்தம் ஏற்பட்டதை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு என மக்களுக்கு அச்சம் ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த கடைகள், வணிக வளாகங்கள், உணவகங்கள், விடுதிகளில் மக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள நுழைய முயன்றதில் அமளி ஏற்பட்டு பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.
ஆனால், அது இருசக்கர வாகனத்தால் ஏற்படுத்தப்பட்ட ஒலி என பின்னர் தெரியவந்தது. இருப்பினும் இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் எந்த தகவலையும் வெளியிடவில்லை.