அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பயன்படுத்திய ஆடை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடனான சந்திப்பின்போது இம்ரான் கான், நீல நிற சல்வார் கமீஸ் வகை ஆடை மற்றும் பெஷாவர் வகை காலணிகளை அணிந்திருந்தார். இது அங்கிருந்தவர்களின் கவனத்தைப் பெற்றது. மேலும் இது சமூக வலைதளங்களிலும் வைரலாகப் பரவியது.
இந்நிலையில், இஸ்லாமாபாத்தைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் ஒருவர், அந்த உடை தயாரிப்பு தன்னுடையது தான் என்று தெரிவித்துள்ளார். ஆனால், இம்ரானின் உதவியாளர் ஸுல்ஃபி புகாரி இதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பிபி தான் உடையின் வடிவமைப்பாளர் எனவும் தெரிவித்தார்.
இதுகுறித்து இம்ரானின் உதவியாளர் ஸுல்ஃபி புகாரி கூறுகையில்,
ஆடை வடிவமைப்பாளர்களைக் கொண்டு தனது ஆடைகளை வடிவமைத்துக்கொள்வதை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எப்போதும் விரும்பியதில்லை. எளிமையான பாரம்பரிய உடைகளை மட்டுமே விரும்பி பயன்படுத்துவார். அவருடைய மனைவி புஷ்ரா பிபி தான் தற்போது இம்ரானின் உடைகளை தேர்வு செய்து பாகிஸ்தானிலேயே உள்ள ஒரு உள்ளூர் தையல்காரரிடம் வடிவமைத்து வருகிறார்.
எனவே இம்ரான் கானின் உடையை ஆடை வடிவமைப்பாளர்கள் சொந்தம் கொண்டாடுவது முற்றிலும் தவறானது. அவர்களெல்லாம் ஏமாற்றுக்காரர்கள் என்றார்.