ஜகார்தா: இந்தோனேஷியாவில் உள்ள கேஸ் லைட்டர் ஆலை ஒன்றில் நிகழ்ந்த தீ விபத்தில் 22 பேர் பரிதாபமாக பலியாகினர்.
இந்தோனேஷியாவின் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ளது பிஞ்ஜாய் நகரம். இதற்கு அருகில் உள்ள சம்பிரேஜு எனும் இடத்தில சிறிய கேஸ் லைட்டர் ஆலை ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆலையில் உள்ளூர் நேரப்படி காலை 11.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆலையின் கிட்டங்கி பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 22 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மீதமுள்ளவர்களில் மூவரை அக்கம் பக்கத்தினர் வந்து உயிருடன் மீட்டனர்.
சம்பவம் பற்றி கேள்விப்பட்ட உடன் அங்கு வந்த தீயணைப்பு படையினர் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து போராடி இரண்டு மணி நேரத்தில் தீயை அணைத்தனர்.
தீ விபத்திற்கு முன்பாக பெரும் வெடிச்ச்சத்தம் கேட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள். காயம்பட்டவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலையில் ஏற்பட்ட விபத்து பற்றி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .