நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரிலுள்ள இரு மசூதிகளில் பிரென்டன் ஹாரிஸன் டாரன் என்பவர் சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்தத் தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர், இவர்களில் 5 பேர் இந்தியர்கள். பலத்த காயமடைந்த 50 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 12 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இந்நிலையில், துருக்கியைச் சேர்ந்த 46 வயது ஆண் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிந்தார். குடும்ப உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதால் அவரது பெயர் உள்ளிட்ட இதர விவரங்கள் வெளியிடப்படவில்லை என்று நியூஸிலாந்து அரசு தெரிவித்துள்ளது. இவருடைய மரணத்தை துருக்கி அரசாங்கமும் உறுதிபடுத்தியுள்ளது.
இதனால் நியூஸிலாந்து மசூதித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51-ஆக அதிகரித்துள்ளது.
ஐசியூ-வில் சிகிச்சை பெற்று வந்த மற்றவர்கள் உடல் நலம் தேறிய நிலையில், இவருக்கு மட்டும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. உயிரிழந்தவருக்கு நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா, ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.