அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிரான்க்ஸ் உயிரியல் பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவில் சிங்கம் இருக்கும் இடத்துக்குள் ஒரு பெண் அத்துமீறி நுழைந்துள்ளார். அந்த ஆண் சிங்கமும் அவரை நோக்கி நெருங்கி வரத் தொடங்கியது.
ஆனால், அந்தப் பெண் சிறிதளவுகூட பயம் இல்லாமல் சிங்கத்தை நோக்கி கையசைத்து, நடனமாடி மகிழ்ந்துள்ளார். அந்த சிங்கமும் பெண்ணின் நகர்வுகளைப் பார்த்தபடி அவரை எதுவும் செய்யாமல் அப்படியே நின்று கொண்டிருந்தது.
இந்த விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
சிங்கம் இருக்கும் இடத்துக்குள் அந்தப் பெண் எப்படி நுழைந்தார் என்பது இதுவரை சரியாக கண்டுபிடிக்கப்படவில்லை. இருந்தபோதிலும், அந்தப் பெண்மணி செய்தது மிகப் பெரிய விதிமுறை மீறலாகவே பார்க்கப்படுகிறது.
ஒருவேளை, அந்த சிங்கம் பெண்ணை தாக்கியிருந்தால் அது மிகப் பெரிய பிரச்னையையும், விளைவுகளையும் ஏற்படுத்தியிருக்கும். எந்த விபரீதமும் நடக்காத காரணத்தினால் மட்டுமே, இந்த விடியோவைப் பார்ப்பதற்கு தற்போது சுவாரஸ்யமாக இருக்கிறது.
இதன்காரணமாகவே, இதுபோன்ற செயல்களை ஊக்குவிக்க முடியாது. இந்தப் பெண் செய்தது மிகப் பெரிய தவறு. எந்த காரணத்துக்காகவும் இந்த செயல் தவறான உதாரணமாக அமைந்துவிடக் கூடாது.
நியூயார்க் போலீஸார் இந்த விதிமீறல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், செவ்வாய்கிழமை நிலவரப்படி எந்தவித கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.