ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டுத் தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: தங்களுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டதாக அமெரிக்கா அறிவித்தது முதல், தாக்குதலின் தீவிரத்தை தலிபான் பயங்கரவாதிகள் அதிகரித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, ஆப்கானிஸ்தானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள காலாத் நகரில் அந்தப் பயங்கரவாதகள் வியாழக்கிழமை அதிகாலை கார் குண்டுத் தாக்குதல் நடத்தினர்.
அந்த நகர மருத்துவமனையில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், அம்மருத்துவமனை தரைமட்டமானது.
இந்தத் தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர்; 90 பேர் காயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவுக்கும், தலிபான்களுக்கும் இடையே கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் ஏற்படும் சூழல் உருவாகியிருந்தது.
எனினும், காபூலில் அமெரிக்கத் தூதரகம் அமைந்துள்ள பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் அமெரிக்க வீரர் உள்பட 12 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தலிபான்களுடனான பேச்சுவார்த்தை முறிந்துவிட்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதையடுத்து, தங்களது தாக்குதலை தலிபான் பயங்கரவாதிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். வரும் 28-ஆம் தேதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலை சீர் குலைக்கும் நோக்கிலும் அவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அதிபர் அஷ்ரஃப் கனி பங்கேற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலும், அமெரிக்கத் தூதரகம்
அருகிலும் தலிபான் பயங்கரவாதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதல்களில் 48 பேர் உயிரிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து, நங்கர்ஹார் மாகாணத் தலைநகர் ஜலாலாபாதிலுள்ள அரசு அலுவலகத்தில் புதன்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில், கலாத் நகர மருத்துவமனையில் தலிபான் பயங்கரவாதிகள் தற்போது தாக்குதல் நடத்தியுள்ளனர்.