
கொழும்பு: இலங்கை அம்பாறை மாவட்டம் சம்மாத்துறை பகுதியில் அதிக அளவில் வெடிகுண்டு மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இலங்கை தலைநகர் கொழும்புவில் ஈஸ்டர் தினமான கடந்த ஞாயிறன்று தேவாலயங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 353 பேர் மரணமடைந்தனர். 500-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை போலீசார் இதுவரை 70 பேரைக் கைது செய்துள்ளனர்.
மேலும் சந்தேகத்துக்கிடமான 100 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. தேடுதல் வேட்டையும் தீவிரமாக நடந்து வருகிறது
அத்துடன் குண்டு வெடிப்புக்கு மறுநாள் திங்களன்று நடைபெற்ற தொடர் சோதனையில் இலங்கை சர்வதேச விமான நிலையம், கொழும்பு மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட சில இடங்களில் வெடிக்காத குண்டுகள் மற்றும் டெட்டனேட்டர்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன
அதன் தொடர்ச்சியாக வியாழனன்று இலங்கையின் நுவரெலியா நகரில் உள்ள ஹவேலியா பகுதியில் 200 டெட்டனேட்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதற்கு கொஞ்சம் முன்னதாக இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள கடற்கரை முகத்துவாரப் பகுதியில் வியாழனன்று கையெறி குண்டுகள் மற்றும் ஆயுதங்களுடன் மூவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் இலங்கை அம்பாறை மாவட்டம் சம்மாத்துறை பகுதியில் வெள்ளியன்று அதிக அளவில் வெடிகுண்டு மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இலங்கை காவல்துறையினர் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் சேர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில் இவை கைப்பற்ப்பட்டுள்ளான. இதுதொடர்பாக ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
ஐ.எஸ்.பயங்கரவாதிகள் மீண்டும் இலங்கையில் நடத்த உள்ள தற்கொலைப் படைத் தாக்குதலுக்கான ஒத்திகை இது என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூடுதலாக இலங்கையின் ஜனாதிபதி மாளிகையான அலரி மாளிகைக்கு அருகே இரண்டு தற்கொலை படை வெடிகுண்டு ஜாக்கெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வருகின்றன.
இத்தகைய சம்பவங்கள் இலங்கையில் பதற்றத்தை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.