அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் பின்லேடனின் மகனும், அந்த அமைப்பின் தலைமைப் பதவிக்கு அவரது வாரிசாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான ஹம்ஸா பின்லேடன், அமெரிக்க தாக்குதல் நடவடிக்கையில் கொல்லப்பட்டதாக அந்த நாட்டு என்பிசி நியூஸ் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி அந்தத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளதாவது: பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் தாக்குதல் நடவடிக்கையில் கொல்லப்பட்டதை அதிகாரிகள் புதன்கிழமை உறுதிப்படுத்தினர்.
எனினும், அவர் எந்தத் தாக்குதலில், எப்போது கொல்லப்பட்டார் என்ற விவரங்களை அவர்கள் விரிவாகத் தெரிவிக்கவில்லை.
அமெரிக்க பங்களிப்புடன் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது அவர் கொல்லப்பட்டதாக மட்டும் அவர்கள் தெரிவித்தனர் என்று அந்தத் தொலைக்காட்சி குறிப்பிட்டுதுள்ளது.
டிரம்ப் மெளனம்: இந்த தகவல் குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அதிகாரப்பூர்வ அலுவலகத்தில் அவரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
எனினும், அந்தத் தகவலை மறுக்கவோ, ஆமோதிக்கவோ அவர் மறுத்துவிட்டார்.
ஹம்ஸா பின்லேடன் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 10 லட்சம் டாலர் (சுமார் ரூ.690 கோடி) சன்மானம் வழங்கப்படும் என்று அமெரிக்க அரசு கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்திருந்தது.
எனினும், அதற்கு முன்னரே அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒசாமா பின்லேடனின் 3-ஆவது மனைவிக்குப் பிறந்த ஹம்ஸா பின்லேடன், அவரது 20 குழந்தைகளில் 15-ஆவதாகப் பிறந்தவர். அவருக்கு 30 வயது இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அல்-காய்தா அமைப்பின் வளர்ந்து வரும் தலைவர் என்று அவரைப் பற்றிய அறிக்கையில் அமெரிக்க அரசு குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதலுக்குக் காரணமான ஒசாமா பின்லேடன், பாகிஸ்தானில் இருந்த தனது பதுங்குமிடத்தில் அமெரிக்க சிறப்பு அதிரடிப் படை வீரர்களால் கடந்த 2011-ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.