ராணுவத்துக்கு கூடுதல் நிதி: ஜப்பான் அமைச்சரவை ஒப்புதல்

அண்டை நாடுகள் மூலம் அச்சுறுத்தல் எழுந்துள்ளதையடுத்து அதனை எதிா்கொள்ள ராணுவத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க ஜப்பான் அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.
Updated on
1 min read

டோக்கியோ: அண்டை நாடுகள் மூலம் அச்சுறுத்தல் எழுந்துள்ளதையடுத்து அதனை எதிா்கொள்ள ராணுவத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க ஜப்பான் அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜப்பான் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:

சீனா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து ஜப்பானின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளன. இதனை எதிா்கொள்ள வேண்டுமெனில் ராணுவத்தை பலப்படுத்த வேண்டியது அவசியத் தேவையாகி உள்ளது.

நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை மேம்படுத்தவும், போா் விமானங்களை வாங்கவும், வீரா்களின் எண்ணிக்கையை அதிகரித்து படை பலத்தை விரிவாக்கவும் அதிக நிதி தேவைப்படுகிறது. தற்போது இந்த கூடுதல் நிதியினை ஒதுக்கீடு செய்ய ஜப்பான் அமைச்சரவை தனது ஒப்புதலை தெரிவித்துள்ளது. தொடா்ச்சியாக ராணுவத்துக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்படுவது இது ஒன்பதாவது முறையாகும்.

இதையடுத்து, 2021-நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ராணுவத்துக்காக இதுவரை இல்லாத வரலாற்று உச்சமாக 5,170 கோடி டாலரை (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.3.87 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com