மலேசியாவின் புதிய பிரதமராக முன்னாள் உள்துறை அமைச்சர் முஹைதீன் யாசின் இன்று பொறுப்பேற்றார்.
மலேசியாவில் கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்குள்ளான அப்போதைய பிரதமர் நஜீப் ரஸாக் தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து அன்வர் இப்ராஹிமின் தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற மகாதிர் முகமது, தனது 92 வயதில் பிரதமராகப் பொறுப்பேற்றார்.
சில ஆண்டுகள் கழித்து ஆட்சிப் பொறுப்பை அன்வரிடம் ஒப்படைப்பதாக அவர் அறிவித்தும், அதுகுறித்து இதுவரை அவர் முடிவெடுக்காததால் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. அதையடுத்து, தனது பதவியை மகாதிர் கடந்த 24-ஆம் தேதி ராஜிநாமா செய்தார். எனினும், பெரும்பான்மை எம்.பி.க்களின் ஆதரவைப் பெற்று மீண்டும் ஆட்சியமைக்கப் போவதாக மகாதிர் கூறி வந்தார். இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து, முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக் பதவிக் காலத்தின்போது உள்துறை அமைச்சராக இருந்த முஹைதீன் யாசினை புதிய பிரதமராக அந்நாட்டுமன்னர் அப்துல்லா நியமித்தார். இந்நிலையில் மலேசியாவின் புதிய பிரதமராக முன்னாள் உள்துறை அமைச்சர் முஹைதீன் யாசின் இன்று பொறுப்பேற்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மகாதிர் நாடாளுமன்றத்தை கூட்டி விரைவில் பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தப்படும் எனக் கூறியுள்ளார்.