மேரிலாந்து: உலக அளவில் கரோனா தொற்று பாதிப்புக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9.90 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இதுகுறித்து புள்ளி விவரங்கள் கூறுவதாவது:
உலகம் முழுவதும் 213 நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள, ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றுக்கு கோடிக்கணக்கான மக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,30,53,138 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9,90,738 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா பாதித்த 3,30,53,138 கோடி பேரில் 2,44,05,921 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது 76,48,501 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 65,293 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
உலகளவில் கரோனா பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 72,87,561 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,09,177 பேர் பலியாகியுள்ளனர். இது உலக உயிரிழப்பு எண்ணிக்கையில் 20 சதவீதத்திற்கும் அதிகமானதாகும். தொடர்ந்து உயிரிழப்பில் பிரேசில் 1,40,537 உயிரிழப்புடன் உலகின் இரண்டாவது நாடாக உள்ளது.
தொற்று பாதிப்பில் 59 லட்சத்து 90 ஆயிரத்து 581 பாதிப்புகளுடன் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது, அதே நேரத்தில் நாட்டின் இறப்பு எண்ணிக்கை 94,534 ஆக உயர்ந்துள்ளது.
மெக்ஸிகோ, பிரிட்டன், இத்தாலி, பெரு, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகியவை 30,000 க்கும் மேற்பட்ட இறப்புகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் உள்ளது.