ஸ்பெயினில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியாவோரின் எண்ணிக்கை தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் (புதன்கிழமை) உயர்ந்துள்ளது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஸ்பெயின் மிக முக்கியமானதாகும். நோய்த் தொற்றால் அதிகம் பாதித்தோர் எண்ணிக்கை கொண்ட நாடாக அமெரிக்காவுக்கு அடுத்தபடியாகவும், நோய்த் தொற்றால் அதிகம் பலியானோர் எண்ணிக்கை கொண்ட நாடாக இத்தாலிக்கு அடுத்தபடியாகவும் ஸ்பெயின் உள்ளது.
அங்கு கடந்த வியாழக்கிழமை ஒரே நாளில் 950 பேர் பலியாகினர். அதன் பிறகான நாள்களில் பலி எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியது. தொடர்ந்து 4 நாள்களாக குறைந்து வந்த பலி எண்ணிக்கை நேற்று (செவ்வாய்கிழமை) மீண்டும் உயரத் தொடங்கியது. செவ்வாய்கிழமை நிலவரப்படி 24 மணி நேரத்தில் 743 பேர் பலியாகினர்.
இந்நிலையில், இன்றைய (புதன்கிழமை) நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 757 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம், அந்நாட்டில் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 14,500 -ஐத் தாண்டி 14,555 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,180 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட பாதித்தோரின் எண்ணிக்கை 1,46,690 ஆக உயர்ந்துள்ளது.