ஸ்பெயினில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை கடந்த 17 நாட்களில் இல்லாத அளவுக்கு இன்று குறைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் நோய்த் தொற்று ஸ்பெயினிலும் பாதிப்பை உருவாக்கியுள்ளது.
நோய்த் தொற்றால் அதிகம் பாதித்தோர் எண்ணிக்கை கொண்ட நாடாக அமெரிக்காவுக்கு அடுத்தபடியாகவும், நோய்த் தொற்றால் அதிகம் பலியானோர் எண்ணிக்கை கொண்ட நாடாக இத்தாலிக்கு அடுத்தபடியாகவும் ஸ்பெயின் உள்ளது.
அங்கு தினமும் நூற்றுக்கணக்கில் கரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். அந்த வகையில் இன்று, ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்புக்கு 605 பேர் உயிரிழந்துள்ளனர். இது தினசரி இறப்புகளில் கடந்த 17 நாட்களில் இல்லாத அளவுக்கு குறைவாகும்.
இதன்மூலம், அந்நாட்டில் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 15,843 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,57,022 ஆகவும், அதே நேரத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 55,668 ஆகவும் உள்ளது.