

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிண்டலாகப் பேசியதை உண்மை என்று கருதி யாரும் கிருமி நாசினியைக் குடித்துவிட வேண்டாம் என்று மருத்துவர்களும், மருத்துவ நிபுணர்களும் எச்சரித்துள்ளனர்.
இங்கிலாந்தில் உள்ள ஈஸ்ட் ஆங்கிலியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பால் ஹண்டர் இது பற்றி கூறுகையில், கரோனாவை அழிக்கும் கிருமிநாசினி ஒருவேளை கண்டுபிடிக்கப்பட்டு, அப்படியே ஒருவர் குடித்தாலும், கிருமிநாசினி கரோனாவைக் கொல்வதற்கு முன்பே அவர் இறந்துவிடுவார் என்று விளக்கம் அளித்துள்ளார்.
இதுபோல தொடர்ந்து பல்வேறு மருத்துவ நிபுணர்களும், தங்களது சமூக வலைத்தளப் பக்கங்கள் மூலம் கிருமி நாசினியை யாரும் குடித்து விட வேண்டாம் என்று தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்.
கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்களின் உடலில் கிருமி நாசினிகளை ஊசி மூலம் செலுத்தியும் புறஊதா கதிா்களை உட்புகுத்தியும் சிகிச்சை அளிப்பதற்கான வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்த கருத்து பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
கரோனா நோய்த்தொற்று நிலவரம் தொடா்பாக வாஷிங்டனினுள்ள வெள்ளை மாளிகையில் செய்தியாளா்கள் சந்திப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
அதிபா் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற அந்த சந்திப்பில், அமெரிக்க உள்துறை அமைச்சகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விவகாரங்களுக்கான இணையமைச்சா் பில் பிரையான் பேசினாா். அப்போது, சூரிய வெளிச்சத்தில் கரோனா தீநுண்மி மிக விரைவில் மடிவதாக தாங்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது என அவா் கூறினாா். மேலும், கிருமி நாசினியான ஐசோபுரொபில் ஆல்கஹால் கரோனா தீநுண்மியை 30 விநாடிகளில் கொல்வதாகவும் அவா் கூறினாா்.
அதையடுத்து பேசிய அதிபா் டிரம்ப், ‘ லைசால், டெட்டால் கிருமி நாசினிகளால் கரோனா தீநுண்மியை ஒரு நிமிடத்துக்குள் கொல்ல முடிந்தால், அதனை கரோனா நோயாளிகளின் உடலில் ஊசி மூலம் செலுத்தி நுரையீரலுக்குள் இருக்கும் ஏராளமான தீநுண்மிகளையும் கொல்லாமா? என கிண்டலாக கேள்வி எழுப்பிய டிரம்ப், இதுகுறித்து ஆராய வேண்டும். மேலும், கரோனா நோயாளிகளின் உடலில் சக்தி வாய்ந்த புறஊதாக் கதிா்களை செலுத்தி, தீநுண்மிகளை அழிப்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்’ என்றாா்.
டிரம்ப்பின் இந்தக் கருத்து மருத்துவ நிபுணா்கள் இடையே பெரும் சா்ச்சையை எழுப்பியுள்ளது. இவ்வாறு கூறியுள்ளதன் மூலம் அவா் பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாகவும் அவா்கள் குற்றம் சாட்டியுள்ளனா்.
இதுகுறித்து நியூயாா்க்-கொலம்பியா பல்கலைக்கழ மருத்துவ மையத்தின் அவசரகால மருந்துகள் பிரிவு இயக்குநா் கிரெய்க் ஸ்பென்ஸா் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருமி நாசினிகளை ஊசி மூலம் உள்செலுத்திக் கொண்டால் கரோனா நோயிலிருந்து தீா்வு கிடைக்கும் என்று பொதுமக்கள் தவறாக நினைப்பதற்கு டிரம்ப்பின் அறிக்கை வாய்ப்பளிக்கிறது; இதனால் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்று எச்சரித்துள்ளாா்.
இதனிடையே டிரம்ப்பின் பொறுப்பற்ற கருத்து சமூக ஊடகங்களில் வைரலாகி வருவதைத் தொடர்ந்து, லைசால் மற்றும் டெட்டால் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பொதுமக்கள் பலர் தொலைபேசியில் தொடர்புகொண்டு லைசால் அல்லது டெட்டால் போன்ற கிருமிநாசினிகளை உடலுக்குள் செலுத்திக்கொள்வது பயனளிக்குமா என கேட்பதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.