உலகளவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 2.84 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
வெள்ளியன்று 24 மணி நேரத்தில் புதிதாக 2,84,196 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, மேலும் 9,753 பேர் பலியானதாகவும் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 69,641 பேருக்கும், பிரேசிலில் 67,860 பேருக்கும், இந்தியாவில் 49,310 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜூலை 18-ம் தேதி 2,59,848 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்ததே, உச்சபட்ச எண்ணிக்கையாக இருந்தது.
அதேசமயம் பலி எண்ணிக்கையைப் பொருத்தவரை, பெருவில் 3,876 பேரும், அமெரிக்காவில் 1,074 பேரும், மெக்சிகோவில் 790 பேரும் மற்றும் இந்தியாவில் 740 பேரும் பலியாகியுள்ளனர்.
சனிக்கிழமை நிலவரப்படி, உலகளவில் கரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 1,57,46,452 ஆக உள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு 41,12,651 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,45,546 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்திலுள்ள பிரேசிலில் 22,87,475 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 85,238 பேர் பலியாகியுள்ளனர்.