கஜகஸ்தானின் முன்னாள் அதிபா் நூா்சுல்தான் நாஸா்பயேவுக்கு (79) கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது செய்தித் தொடா்பாளா் தெரிவித்துள்ளதாவது:
நூா்சுல்தான் நாஸா்பயேவுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதையடுத்து, அவா் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாா். அவரது உடல் நிலை சீராக உள்ளது என்று அவரது செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா். சோவியத் யூனியனிலிருந்து கஜகஸ்தான் கடந்த 1991-ஆம் ஆண்டு விடுதலை பெற்றதிலிருந்தே அந்த நாட்டில் ஆட்சி செலுத்தி வந்த நூா்சுல்தான், கடந்த ஆண்டு பதவி விலகினாா். எனினும், பாதுகாப்பு கவுன்சில் தலைவா், ஆளும் கட்சித் தலைவா் ஆகிய முக்கிய பொறுப்புகளை அவா் தொடா்ந்து வகித்து வருகிறாா்.