சீனாவின் வூஹான் மாகாணத்தில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா தொற்று பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து கரோனா தொற்று உலகம் முழுவதும் பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து பேரிடர் அறிவிக்கப்பட்டு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
இதையும் படிக்க | 400 மீ. தடை ஓட்டம்: நார்வே வீரர் உலக சாதனை
கரோனா வைரஸ் கண்டறியப்பட்டு 2 ஆண்டுகள் ஆனாலும் கூட இன்றும் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் பல்வேறு நாடுகள் தவித்துவருகின்றன.
இந்நிலையில் வூஹானில் கட்டுப்படுத்தபட்ட கரோனா தொற்று பரவல் தற்போது மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது.
திங்கள்கிழமை வூஹான் மாகாணத்தில் பணியாற்றும் 7 புலம்பெயர் தொழிலாளர்களிடையே கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் நகரின் அனைத்து பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
அதேபோல் நாஞ்சிங்கில் உள்ள விமான நிலையத்தில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களிடையே தொற்றுநோய் பரவியதை உறுதிப்படுத்தியுள்ள சீனா உருமாற்றம் அடைந்த டெல்டா வகை கரோனா தொற்று இதுவரை 12க்கும் மேற்பட்ட நகரங்களில் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதுவரை டெல்டா வகை கரோனா தொற்றுக்கு 61 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து குடியிருப்புகளிலும் பரிசோதனை மேற்கொள்வதை சீன அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
நாஞ்சிங்கிற்கு அருகிலுள்ள கிழக்கு நகரமான யாங்சோவில் இதுவரை 40 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
தொற்று பரவலைக் கட்டுப்படுத்த யாங்சோ பகுதியில் வசிக்கும் மக்கள் நாளொன்றுக்கு குடும்பத்திற்கு ஒருவர் மட்டும் வெளியில் வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.