

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தாக்குதலுக்கு பயந்து சொந்த ஊர்களிலிருந்து புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 3.90 லட்சமாக அதிகரித்துள்ளதாக ஐநாவின் மனிதநேய விவகாரக் குழு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாகத் தங்கி சண்டையிட்டு வந்த அமெரிக்கப் படையினா், அங்கிருந்து முழுமையாக தங்களது நாடுகளுக்குத் திரும்பி வருகின்றனா். இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டுள்ள தலிபான் அமைப்பினர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தி கைப்பற்றி வருகின்றனர்.
இதுவரை ஆப்கானிஸ்தானின் 421 மாவட்டங்கள் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. இரான், தஜிகிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதிகளும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில், தலிபான்களின் தாக்குதலுக்கு பயந்து சொந்த ஊர்களிலிருந்து நாட்டின் தலைநகரான கபூல் மற்றும் சில பெரும் நகரங்களுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர்.
இதுகுறித்து ஐநாவின் மனிதநேய விவகாரக் குழு வெளியிட்ட செய்தியில்,
“தாக்குதலால் 3,90,000 மக்கள் சொந்த ஊர்களிலிருந்து வெளியேறியுள்ளனர். கடந்த ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 5 வரை கபூல் நகரத்திற்கு மட்டும் 5,800 க்கும் மேற்பட்டோர் புலம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் அனைவரும் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.
மேலும், பலர் சாலையோரங்களில் தற்காலிக இருப்பிடம் அமைத்தும், பூங்காக்களிலும் தங்கியுள்ளனர். அவர்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை தொண்டு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
நாடு முழுவதும் இதுவரை 156 தொண்டு நிறுவனங்கள் மூலம் 78 லட்சம் மக்களுக்கு உணவுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.”
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.