கரோனா வைரஸ் தொடர்பான ஆய்விற்காக சீனா சென்றுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுக்குழு வூஹான் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டது.
கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திய கரோனா தொற்று குறித்து உலக சுகாதார நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
கரோனா வைரஸ் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள சீனா சென்றிருந்த உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுக் குழு 2 வார தனிமைப்படுத்துதலுக்குப் பிறகு வியாழக்கிழமை தனது ஆய்வுப் பணியைத் துவங்கியது.
கரோனா ஆய்வு நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் கரோனா தடுப்பு முகாம்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ள ஆய்வுக்குழு கரோனா தோன்றியதாக குறிப்பிடப்படும் வூஹான் நகரிலும் தனது ஆய்வை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை கரோனா வைரஸின் ஆரம்ப பாதிப்புகளுக்கு சிகிச்சையளித்த வூஹான் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து கடல் உணவு சந்தையையும், வூஹான் தொற்றுநோய் மையத்தையும் ஆய்வுக்குழு பார்வையிட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.