லிபியா: நடுக்கடலில் படகு கவிழ்ந்து 57 அகதிகள் பலி
கெய்ரோ: லிபியாவில் கடலில் படகு கவிழ்ந்ததில் அகதிகள் 57 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக புலம்பெயர்வோருக்கான சர்வதேச அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சஃபா மிஷெலி கூறியது: லிபியாவின் மேற்கு கடலோர நகரமான கும்ஸிலிருந்து அந்தப் படகு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டது. அதில் அகதிகள் 75 பேர் இருந்தனர். நடுக்கடலில் அந்தப் படகு திங்கள்கிழமை கவிழ்ந்ததில் ஏறக்குறைய 57 பேர் உயிரிழந்தனர்.
ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 18 அகதிகள் மீட்கப்பட்டு கரைக்கு அழைத்து வரப்பட்டனர் என்றார்.
ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அகதிகள் படகுகளில் செல்லும்போது மத்தியதரைக் கடலில் அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நிலை உள்ளது. லிபியாவிலிருந்து அண்மைக்காலமாக இவ்வாறு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நிகழாண்டின் முதல் 6 மாதங்களில் இவ்வாறு சென்ற 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டு லிபியாவில் உள்ள தடுப்பு முகாம்களுக்கு திரும்ப அனுப்பப்பட்டுள்ளதாக ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
