இருபாலர் கல்விக்கு தலிபான்கள் தடை: இப்படி மாறிய பல்கலை வகுப்புகள்

அதில் ஒன்றுதான் இருபாலர் கல்விக்குத் தடை. இதனால், பல்கலைக்கழக வகுப்பறைகளுக்குள் மாணவ, மாணவிகளுக்கு இடையே திரையிடப்பட்டுள்ளது.
தலிபான் படையினா் (கோப்புப் படம்)
தலிபான் படையினா் (கோப்புப் படம்)


காபூல்: ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு, பல்வேறு நடைமுறை மாற்றங்களை அவர்கள் அறிவித்து வருகிறார்கள். அதில் ஒன்றுதான் இருபாலர் கல்விக்குத் தடை. இதனால், பல்கலைக்கழக வகுப்பறைகளுக்குள் மாணவ, மாணவிகளுக்கு இடையே திரையிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக வகுப்பறைகளுக்குள், மாணவ, மாணவிகளுக்கென்று  தனித்தனி வகுப்பறைகளை ஏற்படுத்த முடியாததால், திரைச்சீலை கொண்டு பிரிக்கப்பட்டுள்ளது. ஒரே வகுப்பறையில் அமர்ந்து, மாணவிகளும் மாணவர்களும் கல்வி பயிலக் கூடாது என்று தலிபான்கள் உத்தரவிட்டிருக்கும் நிலையில், இவ்வாறு மாற்றியமைக்கப்பட்டிருப்பதாக ஆப்கான் செய்தி நிறுவனம் புகைப்படத்துடன் சுட்டுரையில் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த புகைப்படத்தில், மாணவிகள் ஒரு பக்கமும், மாணவர்கள் ஒரு பக்கமும் அமர்ந்திருக்க, நடுவில், திரைச்சீலை கொண்டு வகுப்பறை பிரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பல்கலைக்கழகங்களுடன் தலிபான்கள் மேற்கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில், இருபாலரும் இணைந்து கல்வி கற்பதை இனிமேலும் தொடர முடியாது, இதற்கு ஒரு முடிவு கட்டப்பட வேண்டும் என்று தலிபான்கள் தரப்பில் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானில், பள்ளிகளில் ஏற்கனவே மாணவ, மாணவிகளுக்கு என்று தனித்தனி வகுப்பறைகள் இருக்கும் நிலையில், பல்கலைக்கழகங்களில் மட்டும்தான் இருபாலர் படிக்கும் முறை இருந்தது குறிப்பிடத்தக்கது.

தனியார் பல்கலைக்கழகங்களில், ஒவ்வொரு வகுப்பறையிலும் ஒரு சில மாணவிகள் மட்டுமே இருக்கும் நிலையில், அவர்களுக்கென்று தனி வகுப்பறைகள் அமைப்பது என்பது இயலாத காரியம் என்று தங்களது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com