நிதி பற்றாக்குறையில் சிக்கிய ஆப்கன் தூதர்கள்; தாய்நாடு திரும்ப முடியாமல் தவிப்பு

தலிபான் அரசை அங்கீகரிப்பதில் பல்வேறு நாடுகள் தயக்கம் காட்டிவரும் நிலையில், நிதி பற்றாக்குறை காரணமாக தூதரகத்தை நடத்த முடியாமல் ஆப்கானிஸ்தான் தூதர்கள் தவித்துவருகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

எதிர்பாராத சூழலில், ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், பல்வேறு நாடுகளில் உள்ள தலிபான் தூதர்கள் நிதி பற்றாக்குறை காரணமாக தூதரத்தை நடத்த முடியாமல் தவித்துவருகின்றனர். ஆப்கானிஸ்தானிலிருக்கும் தங்களின் குடும்பத்தினரின் பாதுகாப்பை எண்ணி அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். வெளிநாடுகளிலேயே தங்கி வாழ முயற்சி மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில், தங்களின் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளும்படி தூதர்களை தலிபான்கள் கேட்டு கொண்டுள்ளனர். தூதரகம் செயல்படுவதில் சிக்கல்கள் இருப்பதாக கனடா, ஜெர்மனி, ஜப்பான் உள்பட எட்டு தூதரகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளனர்.

இதுகுறித்து பெர்லினில் பணிபுரியும் ஆப்கன் தூதர் ஒருவர் கூறுகையில், "இங்குள்ள என்னுடைய சக பணியாளர்களும் பல்வேறு நாடுகளில் ஆப்கன் தூதரகத்தில் பணிபுரியும் அலுவலர்களும் தங்களை ஏற்று கொள்ளும்படி அந்தந்த நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நான் யார் என்று செய்தியில் வெளியானால், காபூலில் உள்ள என்னுடைய மனைவி, நான்கு மகள்களுக்கு என்னாகும் என்ற அச்சம் உள்ளது.

அகதிகளாக வாழ தூதர்கள் முன்வந்துள்ளனர். அந்த கோரிக்கையை ஏற்று கொள்ளும்படி நான் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். காபூலில் உள்ள பெரிய வீடு உள்பட அனைத்தையும் விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. வாழ்க்கையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்" என்றார்.

இதுகுறித்து சர்வதேச உறவுகள் நிபுணரும் பிரிட்டனின் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் விருந்தினர் விரிவுரையாளருமான அப்சல் அஷ்ரப் கூறுகையில், "தலிபான் அரசை அங்கீகரிப்பது குறித்த முடிவை பல்வேறு நாடுகள் இன்னும் எடுக்கவில்லை. எனவே, பல்வேறு நாடுகளில் ஆப்கன் தூதரகம் இயங்குவதில் சிக்கல் நீடித்துவருகிறது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com