ஆஸ்திரேலியா சிட்னியில் டெல்டா வகை கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், தெருக்களில் கட்டுப்பாடுகளை கண்காணிக்கும் வகையில் ராணுவம் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது.
இதனிடையே, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கரோனா காரணமாக இளைஞர் ஒருவர் இன்று (புதன்கிழமை) உயிரிழந்தார். ஆஸ்திரேலியாவில் இளம் வயதிலேயே கரோனா காரணமாக உயிரிழந்த ஒரு சிலரில் இவரும் ஒருவர். அவருக்கு 20 லிருந்து 23 வரை வயதிருக்கலாம் என்றும் உடல் நிலையில் எந்த சிக்கலும் இல்லை என்றும் ஆனால் அவர் கரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
லேசான அறிகுறிகள் தென்பட்ட நிலையில், அவரின் உடல்நிலை மோசமானது. ஊரடங்கு ஆறாவது வாரத்தை எட்டியுள்ள நிலையிலும், தினசரி பாதிப்பு 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் டெல்டா வகை கரோனா தீவிரமாக பரவிவருகின்றது. பிரிஸ்பேனில் ஊரடங்கு நீட்டிப்பட்டு சிட்னியில் உள்ள தெருக்களில் ராணுவம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவருகிறது. ஆஸ்திரேலியாவின் மூன்றாவது பெரிய நகரமான பிரிஸ்பேனில் அமல்படுத்தப்பட்டு ஊரடங்கு செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வந்த நிலையில், அது ஞாயிற்றுக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து குயின்ஸ்லாந்து மாநில துணை முதல்வர் ஸ்டீவன் மைல்ஸ் கூறுகையில், "பரவலை கட்டுப்படுத்த முதற்கட்ட ஊரடங்கு போதவில்லை என்பது தெளிவாகியுள்ளது" என்றார். மற்ற வளர்ச்சி அடைந்த நாடுகளை காட்டிலும், ஆஸ்திரேலியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி மந்தமாகவே உள்ளது.
இருப்பினும், கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மற்ற நாடுகளை காட்டிலும் ஆஸ்திரேலியாவில் குறைவாகவே உள்ளது. ஆனால், பிரதமர் ஸ்காட் மோரிசன் பெருந்தொற்றை கையாண்ட விதம் பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
மளிகை பொருள்களை வாங்க உள்பட அவசியமான காரணங்களுக்கு மட்டுமே வீட்டிலிருந்து வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிட்னி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஐந்து வார காலமாக ஊடரங்கு அமலில் உள்ளது.