
கோப்புப்படம்
வங்கதேசத்தில் இரு மத பிரிவினரிடையே நிகழ்ந்த வன்முறை சம்பவத்தின்போது இரண்டு இந்துக்கள் கொல்லப்பட்டனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, வன்முறையால் நிகழ்ந்த உயிரிழப்பு 6ஆக உயர்ந்துள்ளது.
புதன்கிழமையன்று, துர்கை பூஜை விழாவின் போது, துர்கை சிலையின் முழங்காலுக்கு அருகே குர்ஆன் வைக்கப்பட்டிருப்பது போன்ற விடியோ வெளியானது. இதையடுத்து, அங்கு போராட்டம் வெடித்தது. இதன் தொடர்ச்சியாக, துர்கா பூஜையின் இறுதி நாளான வெள்ளிக்கிழமையன்று பேகம்கஞ் பகுதியில் உள்ள தெருக்களில் 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஊர்வலம் சென்றனர்.
அப்போதுதான், வன்முறை வெடித்துள்ளது. இதுகுறித்து உள்ளூர் காவல்துறை தலைவர் ஷாம் இம்ரான் விரிவாக கூறுகையில், "துர்கா பூஜை திருவிழாவின் 10ஆம் நாளன்று, இந்துக்கள் கோயிலில் சடங்குகளை செய்து வந்துள்ளனர். அப்போது, 200க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கோயில் மீது தாக்குதல் நடத்தினர். கோயில் நிர்வாக உறுப்பினர் ஒருவரை அடித்தே கொன்றுள்ளனர்" என்றார்.
மற்றொரு கொலை சம்பவம் குறித்து விவரித்த மாவட்ட காவல்துறை தலைவர் ஷாஹிதுல் இஸ்லாம், " சனிக்கிழமை காலை, கோயில் அருகே உள்ள குளத்தில் மற்றொரு இந்து மதத்தை சேர்ந்த ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் இரண்டு உயிரிழந்துள்ளனர். குற்றம் செய்தவர்களை கண்டிபிடிக்க முயற்சி செய்துவருகிறோம்" என்றார்.
குர்ஆன் சம்பவம் குறித்த விடியோ சமூகவலைதளத்தில் வெளியானதை தொடர்ந்து, வங்கதேசத்தில் உள்ள 12க்கும் மாவட்டங்களில் இந்துக்களை குறிவைத்து வன்முறை நிகழ்த்தப்பட்டது. புதன்கிழமை பிற்பகுதியில், ஹாஜிகஞ்சில் இந்து கோயிலில் தாக்குதல் நடத்திய 500 பேர் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
இதையும் படிக்க | சிறையிலிருந்தபடி பெற்றோருடன் விடியோ அழைப்பு வழியாகப் பேசிய ஆா்யன் கான்: தந்தை ஷாருக்கிடமிருந்து மணி-ஆா்டா் மூலம் வந்த ரூ.4,500
நாடு முழுவதும் குறைந்தது 150 இந்துக்கள் காயமடைந்திருப்பதாக இந்து மத தலைவர் கோபிந்தா சந்திர பிரமானிக் ஏஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, குறைந்தது 80 தற்காலிக கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இதுகுறித்த புள்ளிவிவரங்களை அலுவலர்கள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
வங்கதேசத்தில் கிட்டத்தட்ட 10 சதவிகிதம் சிறுபான்மையினர் வாழ்ந்து வருகின்றனர்.