கடந்த வியாழக்கிழமை, சீன அதிபர் ஷி ஜின்பிங்குடனான தொலைப்பேசி உரையாடலின்போது கரோனா பிறப்பிடம் குறித்த ஆய்வு பற்றி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆலோசனை மேற்கொண்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் ஜென் சாகி கூறுகையில், "கரோனா உள்பட இரு நாடுகளிக்கிடையே நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்து இருவரும் உரையாடினர். கரோனா பிறப்பிடம் குறித்து தெரிந்து கொள்வதற்கு இந்த அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. ஆம், கரோனா பிறப்பிடம் குறித்த விவகாரம் எழுப்பப்பட்டது. ஆனால், இதுகுறித்து மேலும் என்னால் சொல்ல முடியாது" என்றார்.
உலகம் முழுவதும் 48 லட்சம் பேர் கரோனாவால் பலியாகியுள்ளதால், அதன் பிறப்பிடம் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்கு சீனாவிடம் வலியுறுத்தப்படும் என பைடன் கடந்த மாதம் தெரிவித்திருந்தார். சீனாவில் உள்ள ஆராய்ச்சி கூடத்திலிருந்து கரோனா உருவானதா என்பதை அந்நாட்டின் உதவி இல்லாமல் தெரிந்து கொள்ள முடியாது என அமெரிக்க புலனாய்வு அமைப்பு தெரிவித்திருந்தது.
கரோனா பிறப்பிடம் குறித்து ஆய்வுக்கு சீனா ஒத்துழைப்பு தர மறுக்கிறது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை சீனா மறுத்துவருகிறது. இரு நாடுகளுக்கிடையே பனிப்போர் நிலவிவரும் நிலையில், கடந்த ஏழு மாதங்களில் முதல் முறையாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோருக்கிடையே 90 நிமிடங்களுக்கு தொலைப்பேசி வாயிலாக உரையாடல் நிகழ்ந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.