காற்று மாசுபாட்டால் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் பலியாகி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டால் உலகம் முழுவதும் பல்வேறு நகரங்கள் மோசமான பாதிப்பை சந்தித்து வருகின்றன. காற்று மாசுபாட்டைத் தடுக்க உலக நாடுகள் பலவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
இதையும் படிக்க | ரஷியாவில் புதிதாக 820 பேர் கரோனாவுக்குப் பலி
இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 2005ஆம் ஆண்டிலிருந்து உயர்ந்து வரும் காற்று மாசுபாட்டால் மக்களின் உடல்நலத்தில் பாதிப்புகள் கண்டறியப்படுவது அதிகரித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
மனித உடல்நலத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக காற்று மாசுபாடு உருமாறியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அந்த அறிக்கையில் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் இதனால் பலியாகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | சாம்சங் ’கேலக்ஸி எஃப் 42 5ஜி’ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்
காற்று மாசுபாட்டால் இதய நோய்கள், நுரையீரல் சார்ந்த பாதிப்புகள் மற்றும் நீரிழிவு நோய்களும் எளிதில் மனிதர்களுக்கு ஏற்படுவதாகத் தெரிவித்துள்ள அறிக்கையானது ஏழை மற்றும் வளரும் நாடுகள் இதனால் அதிக பாதிப்புகளை சந்தித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
194 உறுப்பு நாடுகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ள இந்த அறிக்கையானது காற்றில் கலந்துள்ள நைட்ரஜன் டை ஆக்சைடு, சல்பட் டை ஆக்சைடு உள்ளிட்ட நச்சுத் துகள்களின் முந்தைய பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச அளவை மேலும் குறைத்துள்ளது.
புதிய வழிகாட்டுதல்களின்படி பிஎம்2.5 நிலைகான பரிந்துரைக்கப்பட்ட அளவை ஒரு கனமீட்டருக்கு 10 மைக்ரோ கிராமிலிருந்து 5 மைக்ரோ கிராமாக உலக சுகாதார நிறுவனம் குறைத்துள்ளது.
காற்று மாசுபாட்டைத் தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசுகள் கண்டிப்புடன் செயல்படுத்தினால் மட்டுமே உடல்நல பாதிப்புகளிலிருந்து மனிதர்களைக் காக்க முடியும் எனவும் அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.