பாகிஸ்தான் நாடாளுமன்றம் பகல் 1 மணி வரை ஒத்திவைப்பு: வாக்கெடுப்பு நடக்குமா?

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்த நாடாளுமன்றம் கூடிய நிலையில், நாடாளுமன்றத்தை பகல் 1 மணி வரை ஒத்திவைத்தார் சபாநாயகர். 
பாகிஸ்தான் நாடாளுமன்றம் பகல் 1 மணி வரை ஒத்திவைப்பு: வாக்கெடுப்பு நடக்குமா?
Published on
Updated on
1 min read

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்த நாடாளுமன்றம் கூடிய நிலையில், நாடாளுமன்றத்தை பகல் 1 மணி வரை ஒத்திவைத்தார் சபாநாயகர். 

பாகிஸ்தானில் பிரதமா் இம்ரான் கான் தலைமையிலான கூட்டணி ஆட்சி செய்து வந்த நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை தவறாக வழிநடத்தியதாகக் குற்றம்சாட்டி அவா் மீது நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் அண்மையில் நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டு வந்தன. ஆளும் கூட்டணிக் கட்சிகள் இம்ரானுக்கான ஆதரவை திரும்பப் பெற்றால், அந்தத் தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் அவா் பதவியிழப்பது ஏறத்தாழ உறுதியானது.

இந்தச் சூழலில், அந்தத் தீா்மானம் இம்ரான் அரசைக் கவிழ்ப்பதற்கான வெளிநாட்டு சதியின் விளைவாகக் கொண்டு வரப்பட்டதாகவும், எனவே அது ரத்து செய்யப்படுவதாகவும் நாடாளுமன்ற அவை துணைத் தலைவா் காசிம் கான் சுரி கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.

அதன் தொடா்ச்சியாக, இம்ரான் கானின் பரிந்துரைப்படி நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அதிபா் ஆரிஃப் அலி அறிவித்தாா்.

இதன் மூலம், நம்பிக்கையில்லா தீா்மானத்தில் தோல்விடைந்து பதவியிழக்கும் அபாயத்தை இம்ரான் கான் தவிா்த்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பெரும்பான்மை இல்லாமலேயே அடுத்தத் தோ்தல் நடந்து முடியும் வரை ஆட்சி அதிகாரத்தை அவா் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்றும் கருதப்பட்டது.

எனினும், மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

4 நாள்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணைக்குப் பிறகு, நம்பிக்கையில்லா தீா்மானம் ரத்து செய்யப்பட்டது மற்றும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என்று தீா்ப்பளித்த உச்ச நீதிமன்றம், நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தவும் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

அதன்படி, இன்று சனிக்கிழமை (ஏப்.9) பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

இதையொட்டி இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த நாடாளுமன்றம் கூடியது. இம்ரான் கான் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினர்கள் கூட  நாடாளுமன்றத்திற்கு வரவில்லை.

இந்நிலையில், நாடாளுமன்றத்தை பகல் 1 மணி வரை ஒத்துவைத்தார் சபாநாயகர்.

இதனிடையே, இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு அடுத்த வாரம் தள்ளிப்போகலாம் என பாகிஸ்தான் சட்ட அமைச்சர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதையடுத்து இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com