எரிபொருள் நிரப்பும் பிரச்னை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஆர்டெமிஸ் விண்கலத்தை மீண்டும் சனிக்கிழமை விண்ணில் ஏவவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
நிலவுக்கு மீண்டும் வீரர்களை அனுப்பும் திட்டத்தில், முதல்முறையாக விண்வெளி வீராங்கனையை அனுப்ப நாசா முடிவெடுத்திருந்தது. இந்த திட்டத்திற்கு ஆர்டெமிஸ் என பெயரிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
1969 ஆம் ஆண்டு முதல்முறையாக நிலவுக்கு விண்வெளி வீரர்களை நாசா அனுப்பியது. அந்த திட்டம் 'அப்பல்லோ' என்றழைக்கப்பட்டது. 2019-ஆம் ஆண்டு அதன் 50 ஆண்டுகள் நிறைவை ஒட்டி 'ஆர்டெமிஸ்' திட்டத்தை தொடங்கியது குறிப்பிட்டத்தக்கது.
மிகவும் சக்தி வாய்ந்த இந்த பிரமாண்ட ராக்கெட் ஆகஸ்ட் 29-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட இருந்தது. எரிபொருள் நிரப்பும் போது கசிவு கண்டறியப்பட்டதால் கடைசி நேரத்தில் ஆர்டெமிஸ் ராக்கெட் திட்டத்தை நிறுத்தியது நாசா.
இந்நிலையில், ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறை சீர்செய்துள்ள நிலையில், செப்டம்பர் 3-ஆம் தேதி மீண்டும் விண்ணில் ஏவவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.